Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

சேக்கிழார் அருளிய
திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் - முதற் காண்டம்
சருக்கம் 4 ( மும்மையால் உலகாண்ட சருக்கம் ) &
சருக்கம் 5 (திருநின்ற சருக்கம்)

periya purANam of cEkkizAr - Canto 1
carukkam -4 (mummaiyAl ulakANTa carukkam)
& carukkam 5 (tiruninRa carukkam)
In tamil script, TSCII format




Acknowledgements:

Our Sincere thanks go to Dr. Thomas Malten and Colleagues of the Univ. of Koeln, Germany
for providing us with the transliterated/romanized version of the etext and giving us permission
to release the TSCII version as part of Project Madurai etext collections.
TSCII proof reading by tiruciRRampalam aRakaTTaLai, Kovilpatti, Tamilnadu.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram Lausanne, Switzerland.
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. or

ன Project Madurai 1999 - 2004
to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. are
http://www.projectmadurai.org/


சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் -முதற் காண்டம்

4 மும்மையால் உலகாண்ட சருக்கம்


4.1 மூர்த்தி நாயனார் புராணம் -(973- 1021 ) -மின்பதிப்பு
- 4.2 முருக நாயனார் புராணம் - (1022-1035) -மின்பதிப்பு
- 4.3 உருத்திர பசுபதி நாயனார் புராணம் - (1036-1045 ) -மின்பதிப்பு
- 4.4 திரு நாளைப் போவர் நாயனார் புராணம் - (1046 -1082 ) -மின்பதிப்பு
- 4.5 திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் - (1083 - 1210 ) -மின்பதிப்பு
- 4.6 சண்டேசுர நாயனார் புராணம் - (1211- 1270) -மின்பதிப்பு

5. திருநின்ற சருக்கம்


5.1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் -(1271- 1699) -மின்பதிப்பு
- 5.2 குலச்சிறை நாயனார் புராணம் - (1700-1710) -மின்பதிப்பு
- 5.3பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் - (1711 -1721) -மின்பதிப்பு
- 5.4 காரைக்கால் அம்மையார் புராணம் - (1722-1787 ) -மின்பதிப்பு
- 5.5 அப்பூதி அடிகள் நாயனார் புராணம் - (1788-1832) -மின்பதிப்பு
- 5.6 திரு நீல நக்க நாயனார் புராணம் - (1833-1870) -மின்பதிப்பு
- 5.7 நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் - (1871 -1903 ) -மின்பதிப்பு



திருச்சிற்றம்பலம்

4.1 மூர்த்தி நாயனார் புராணம் (973- 1021)

திருச்சிற்றம்பலம்



973 - சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும்
கார் மன்னு சென்னிக் கதிர் மாமணி மாட வைப்பு
நார் மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும்
பார் மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு - 4.1.1

974 - சாயுந்தளிர் வல்லி மருங்குல் நெடுந் தடங்கண்
வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்ய
வாயும் படும் நீள் கரை மண் பொருந்தண் பொருந்தம்
பாயுங் கடலும் படும் நீர்மை பணித்த முத்தம் - 4.1.2

975 - மொய்வைத்த வண்டின் செறிகுழல் முரன்ற சந்தின்
மை வைத்த சோலை மலயந்தர வந்த மந்த
மெய் வைத்த காலுந் தரும் ஞாலம் அளந்த மேன்மைத்
தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணஞ்செயீரம் - 4.1.3

976 - சூழும்஢தழ்ப் பங்கயமாக அத் தோட்டின் மேலாள்
தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார்
யாழின் மொழியில் குழல் இன்னிசையும் சுரும்பும்
வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும் - 4.1.4

977 - சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர்
நூல் பாய் இடத்தும் உள நோன்றலை மேதி பாயப்
பால் பாய் முலை தோய் மதுப் பங்கயம் பாய எங்கும்
சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கேறு சங்கம் - 4.1.5

978 - மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில்
பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும்
சந்தார் முலை மேலன தாழ் குழை வாள் முகப்பொற்
செந்தாமரை மேலன நித்திலஞ் சேர்ந்த கோவை - 4.1.6

979 - மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே அம் மூதூர்
மெய்ய்ம்மைப் பொருளாந் தமிழ் நூலின் விளங்கு வாய்மை
செம்மைப் பொருளுந் தருவார் திருஆலவாயில்
எம்மைப் பவந் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால் - 4.1.7

980 - அப் பொற் பதிவாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச்
செப்பத் தகு சீர்க் குடி செய்தவஞ் செய்ய வந்தார்
எப்பற்றினையும் அறுத்து ஏறுகைத்து ஏறுவார் தாள்
மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார் - 4.1.8

981 - நாளும் பெருங் காதல் நயப்புறும் வேட்கை யாலே
கேளும் துணையும் முதல் கேடில் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்
மூளும் பெருக்கு அன்பு எனும் மூர்த்தியார் மூர்த்தியார்தாம் - 4.1.9

982 - அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில்
எந்தைக்கு அணி சந்தனக் காப்பிட என்றும் முட்டா
அந்தச் செயலின் நிலை நின்று அடியார் உவப்பச்
சிந்தைக்கு இனிதாய திருப்பணி செய்யும் நாளில் - 4.1.10

983 - கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல்
மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்
யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திண்டேர்
சேனைக் கடலுங் கொடு தென் திசை நோக்கி வந்தான் - 4.1.11

984 - வந்துற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச்
சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம்
சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால்
கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான் - 4.1.12

985 - வல்லாண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்தி
நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு
வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு
செல்லாதரு கந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான் - 4.1.13

986 - தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து
வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச்
சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்களோடும்
வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான் - 4.1.14

987 - செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆல வாயுள்
முக்கட் பரனார் திருத் தொண்டரை மூர்த்தியாரை
மைக்கற்புரை நெஞ்சுடை வஞ்சகன் வெஞ்ச மண் போர்
எக்கர்க்குடனாக இகழ்தன செய்ய எண்ணி - 4.1.15

988 - அந்தம் இலவாம் இறை செய்யவும் அன்பனார் தாம்
முந்தை தம் முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார்
தம் தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும்
எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார் - 4.1.16

989 - எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத்
தள்ளுஞ் செயல் இல்லார் சந்தனக் காப்புத் தேடிக்
கொள்ளுந் துறையும் அடைத்தான் கொடும் கோன்மை செய்வான்
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து - 4.1.17

990 - புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும்
வன்மைக் கொடும் பாதகன் மாய்திட வாய்மை வேத
நன்மைத் திரு நீற்று உயர் நன்னெறி தாங்கு மேன்மைத்
தன்மைப் புவி மன்னரைச் சார்வதென்(று)?" என்று சார்வார் - 4.1.18

991 - காய்வுற்ற செற்றங் கொடு கண்டகன் காப்பவும் சென்று
ஆய்வுற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி
ஏய்வுற்ற நற்சந்தனம் எங்கும் பெறாது சிந்தை
சாய் உற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில் - 4.1.19

992 - நட்டம் புரிவார் அணி நற்றிரு மெய்ப் பூச்சு இன்று
முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கைமுட்டாது என்று
வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும் புறந்தோல் நரம்பு என்பு கரைந்து தேய - 4.1.20

993 - கல்லின் புறந் தேய்ந்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து முளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பிரான் ஆனார்
அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு - 4.1.21

994 - அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய! உன்பால்
வன் புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு
முன் பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப்
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன - 4.1.22

995 - இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி முன்பு
செய் வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்து
கை வண்ணம் நிரம்பின வாசம் எல்லாம் கலந்து
மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம் - 4.1.23

996 - அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும்
மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன்
தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பு இலோர்க்கு
மின்னாம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல - 4.1.24

997 - இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர்
மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல்
அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன்
வெவ்வாய் நிரயத்து இடை விரைந்து வீந்தான் - 4.1.25

998 - முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின்
எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம்
முழுதும் புலர்வுற்றது மற்று அவன் அன்ன மாலைப்
பொழுதும் புலர்வுற்றது செங்கதிர் மீது மோத - 4.1.26

999 - அவ் வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள்
கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றி
வை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலே
செய் வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார் - 4.1.27

1000 - தாழும் செயலின்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும்
கூழும் குடியும் முதலாயின கொள்கைத்தேனும்
சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றி
வாழும் தகைத்து அன்றி இந்த வையகம் என்று சொன்னார் - 4.1.28

1001 - பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான்
தன் நெடும் குடைக் கீழ்த் தம் தம் நெறிகளில் சரிந்து வாழும்
மன்னரை இன்றி வைகும் மண்ணுலகு எண்ணுங் காலை
இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார் - 4.1.29

1002 - இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை
செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க
மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றக்
கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று - 4.1.30

1003 - செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து தோளால்
இம் மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை ஏந்துக என்று
பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகோடை நெற்றிக்
கைம்மாவை நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார் - 4.1.31

1004 - கண் கட்டி விடுங்களி யானை அக் காவல் மூதூர்
மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகித்
திண் பொன் தட மாமதில் சூழ் திரு ஆல வாயின்
விண் பிற்பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி - 4.1.32

1005 - நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர்
ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில் இந்த வையம்
தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப்
பூங்கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப - 4.1.33

1006 - வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று
வாழ்வுற்று உலகம் செய்தவத்தினின் வள்ளலாரைச்
சூழ் பொற் சுடர் மாமணி மாநிலம் தோய முன்பு
தாழ்வுற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே - 4.1.34

1007 -மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா
ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம்
பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள் அப்போது
ஓதங்கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர் - 4.1.35

1008 - சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும்
எங்கு எங்கும் இயம்பின பல்லியம் எல்லையில்ல
அங்கு அங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின்
பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும் - 4.1.36

1009 - வெங்கட் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி வேரித்து
தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை
அங்கண் கொடு புக்கரி ஆசனத்து ஏற்றி ஒற்றைத்
திங்கட்குடைக் கீழ் உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார் - 4.1.37

1010 -மன்னுந் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண்
துன்னுஞ் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ்
பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர்
உன்னுஞ் செயல் மந்திர யோகர் நிறுத்தினார்கள் - 4.1.38

1011 - வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச்
சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம்
முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில்
இந்தப் புவி தாங்கி இவ் வின்னரசு ஆள்வான் என்றார் - 4.1.39

1012 - அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு
மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும்
எவ்வாறு அருள் செய்தனை மற்று அவை அன்றி யாவர்
செய்வார் பெரியோய் எனச் சேவடி தாழ்ந்து செப்ப - 4.1.40

1013 - வையம் முறை செய்வென் ஆகில் வயங்கு நீறே
செய்யும் அபிடேகமும் ஆக செழுங்கலன்கள்
ஐயன் அடையாளமும் ஆக அணிந்து தாங்கும்
மொய் புன் சடைமாமுடியே முடி ஆவது என்றார் - 4.1.41

1014 - என்று இவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும்
வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும்
நன்றிங்கு அருள் தான் என நற்தவ வேந்தர் சிந்தை
ஒன்றும் அரசாள் உரிமைச் செயலான உய்த்தார் - 4.1.42

1015 -மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச்
சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம்
தேடுங் கழலார் திருஆல வாய் சென்று தாழ்ந்து
நீடுங்களிற்றின் மிசை நீள் மறுகூடு போந்தார் - 4.1.43

1016 -மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழ மீது
தன்னின்றும் இழிந்து தயங்கு ஒளி மண்டபத்தில்
பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால்
மன்னும் குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி - 4.1.44

1017 - குலவுந் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைகக்
கலகம் செய் அமண்செயல் ஆயின கட்டு நீங்கி
நிலவும் திரு நீற்று நெறித் துறை நீடு வாழ
உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன - 4.1.45

1018 - நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி
முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம் - 4.1.46

1019 - ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும்
சீலங்கொடு வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி
ஞாலந் தனி நேமி நடாத்தி நலம் கொள் ஊழிக்
காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து காத்து - 4.1.47

1020 - பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு தொண்டின்
பேதம் புரியா அருள் பேர் அரசாளப் பெற்று
நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே - 4.1.48

1021 - அகல் பாறையின் வைத்து முழங் கையை அன்று தேய்த்த
இகலார் களிற்று அன்பரை ஏத்தி முருகனாராம்
முகில் சூழ் நறுஞ் சோலையின் மொய் ஒளி மாட வீதிப்
புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம் - 4.1.49
திருச்சிற்றம்பலம்

4.2 முருக நாயனார் புராணம் (1022 -1035)

திருச்சிற்றம்பலம்



1022 - தாது சூழும் குழல் மலையாள் தளிக்கை சூழும் திருமேனி
மீது சூழும் புனல் கற்றை வேணி நம்பர் விரும்பு பதி
சோதி சூழும் மணி மௌலிச் சோழர் பொன்னி திரு நாட்டுப்
போது சூழும் தடஞ்சோலைப் பொய்கை சூழும் பூம் புகலூர் - 4.2.1

1023 - நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம் போல் அரவு அணிந்த
சேம நிலவு திரு நீற்றின் சிறந்த வெண்மைத் திருந்தொளியால்
யாம இருளும் வெளி ஆக்கும் இரவே அல்ல விரை மலர் மேல்
காமர் மதுவுண் சிறை வண்டும் களங்கம் இன்றி விளங்குமால் - 4.2.2

1024 - நண்ணும் இசை தேர் மது கரங்கள் நனை மென் சினையின் மருங்கலைய
வண்ண மதுரத் தேன் பொழிவ வாச மலர் வாயே அல்ல
தண்ணென் சோலை எம் மருங்கும் சாரும் மடமென் சாரிகையின்
பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந் தேன் பொழியுமால் - 4.2.3

1025 - வண்டு பாடப் புனல் தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகை அவிழ்ந்த குளிர் பங்கயங்களே அல்ல
அண்டர் பெருமான் திருப் பாட்டின் அமுதம் பெருகச் செவி மடுக்கும்
தொண்டர் வதன பங்கயமும் துளித்த கண்ணீர் அரும்புமால் - 4.2.4

1026 - ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண் புகலூர் அது தன்னில்
மான மறையோர் குல மரபின் வந்தார் முந்தை முதல்வர்
ஞான வரம்பின் தலை நின்றார் நாகம் புளை வார் சேவடிக் கீழ்
ஊனம் இன்றி நிறை அன்பால் உருகு மனத்தார் முருகனார் - 4.2.5

1027 - அடை மேல் அலவன் துயில் உணர அலர் செங் கமல வயல் கயல்கள்
மடை மேல் உகளும் திருப்புகலூர் மன்னி வாழுந் தன்மையராய்
விடை மேல் வருவார்க்கு ஆளான மெய்ம்மை தவத்தால் அவர் கற்றைச்
சடை மேல் அணியத் திருப் பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார் - 4.2.6

1028 - புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கிப் போய்
மலரும் செவ்வித் தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதி
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த
அலகில் மலர்கள் வெவ் வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார் - 4.2.7

1029 - கோட்டு மலரும் நில மலரும் நீர் மலரும் கொழுங் கொடியின்
தோட்டு மலரும் மா மலரும் சுருதி மலருந் திருவாயில்
காட்டு முறுவல் நிலவு அலரக் கனக வரையிற் பன்னக நாண்
பூட்டும் ஒருவர் திரு முடி மேல் புனையலாகும் மலர் தெரிந்து - 4.2.8

1030 - கொண்டு வந்து தனி இடத்தில் இருந்து கோக்கும் கோவைகளும்
இண்டைச் சுருக்கும் தாமம் உடன் இணைக்கும் வாச மாலைகளும்
தண்டில் கட்டும் கண்ணிகளும் தாளில் பிணைக்கும் பிணையல்களும்
நுண்டாது இறைக்கும் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூன்மார்பர் - 4.2.9

1031 - ஆங்கப் பணிகள் ஆனவற்றுக்கு அமைத்த காலங்களின் அமைத்துத்
தாங்கிக் கொடு சென்று அன்பினொடும் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள்
பாங்கில் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிகப் பற்றான
ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் ஓவா நாவின் உணர்வினார் - 4.2.10

1032 - தள்ளும் முறைமை ஒழிந்திட இத் தகுதி ஒழுகும் மறையவர் தாம்
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம் பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலைப்பால் உடன் உண்ட
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார் - 4.2.11

1033 - அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவார் இருவர் அறியாமல்
மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான வீச்சுரத்து
நன்னர் மகிழ்ச்சி மனம் கொள்ள நாளும் பூசை வழுவாமே
பன்னும் பெருமை அஞ்செழுத்தும் பயின்றே பணிந்து பரவினார் - 4.2.12

1034 - அங்கண் அமருந் திருமுருகர் அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கருளிச்
செங்கண் அடலேறு உடையவர் தாஞ்சிறந்த அருளின் பொருள் அளிக்கத்
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார் - 4.2.13

1035 - அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்
விரவு புகலூர் முருகனார் மெய்மைத் தொண்டின் திறம் போற்றிக்
கரவில் அவர் பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு
பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன் - 4.2.14

திருச்சிற்றம்பலம்

4.3 உருத்திர பசுபதி நாயனார் புராணம் (1036 -1045)

திருச்சிற்றம்பலம்



1036 - நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும் புனல் நீத்தம்
மலர்த் தடம் பணை வயல் புகு பொன்னி நன்னாட்டுக்
குலத்தின் ஓங்கிய குறைவு இலா நிறை குடி குழுமித்
தலத்தின் மேம் படு நலத்தது பெருந் திருத் தலையூர் - 4.3.1

1037 - வான் அளிப்பன மறையவர் வேள்வியின் வளர் தீ
தேன் அளிப்பன நறுமலர் செறி செழுஞ் சோலை
ஆன் அளிப்பன அம் சுகந்து ஆடுவார்க்கு அவ்வூர்
தான் அளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும் - 4.3.2

1038 - அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி
பங்கனார் அடிமைத் திறம் புரி பசுபதியார் - 4.3.3

1039 - ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சினர் ஆகி அத் தொழில் தலை நின்றார் - 4.3.4

1040 - கரையில் கம்பலை புள் ஒலி கறங்கிட மருங்கு
பிரச மென் சுரும்பு அறைந்திடக் கரு வரால் பிறழும்
நிரை நெடுங் கயல் நீரிடை நெருப்பு எழுந்தது அனைய
விரை நெகிழ்ந்த செங் கமலம் என் பொய்கையுள் மேவி - 4.3.5

1041 - தெள்ளு தண் புனல் கழுத்தளவு ஆயிடைச் செறிய
உள்ளுறப் புக்கு நின்று கை உச்சி மேல் குவித்துத்
தள்ளு வெண்டிரைக் கங்கை நீர் ததும்பிய சடையார்
கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு பயின்றார் - 4.3.6

1042 - அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை
வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே
திருமலர்ப் பொருட்டு இருந்தவன் அனையவர் சில நாள்
ஒருமை உய்ந்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார் - 4.3.7

1043 - காதல் அன்பர் தம் அரும் தவப் பெருமையும் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
ஆதி நாயகர் அமர்ந்து அருள் செய்ய மற்றவர் தாம்
தீது இலா நிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார் - 4.3.8

1044 - நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகுற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியாராம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற - 4.3.9

1045 - அயில் கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால்
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி
எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம்
செயலுடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம் - 4.3.10

திருச்சிற்றம்பலம்

4.4 திரு நாளைப் போவர் நாயனார் புராணம் (1046- 1082)

திருச்சிற்றம்பலம்



1046 - பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும்
திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால்
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும்
அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர் - 4.4.1

1047 - நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின்
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டேர்
ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச்
சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும் செழுங் கமலம் - 4.4.2

1048 - நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடுஞ் செழுந் தருவின் குலம் பெருகிக்
கனமருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப்
புனல் மழையோ மதுமழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை - 4.4.3

1049 - பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த பழமிதப்ப வண் பலவின்
நீளமுதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்துகளும் - 4.4.4

1050 - வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும்
வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினாம்
புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய்
அயலிடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர் - 4.4.5

1051 - மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப்
பற்றிய பைங் கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி - 4.4.6

1052 - கூருகிர் மெல்லடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும்
வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ்
கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட
ஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி - 4.4.7

1053 - வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கின மாவும்
புன்றலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும் - 4.4.8

1054 - செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக்
குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை
வெறி மலர்த் தண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி குழல் புன் புலை மகளிர் நெற் குறு பாட்டு ஒலி பரக்கும் - 4.4.9

1055 - புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது
விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும் - 4.4.10

1056 - இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்
அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார் - 4.4.11

1057 - பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால்
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார் - 4.4.12

1058 - ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்
பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும் - 4.4.13

1059 - போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் - 4.4.14

1060 - இவ் வகையில் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும்
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று
மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில் - 4.4.15

1061 - திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து
விருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார் - 4.4.16

1062 - சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன் கூர்க் கண்ணுதலார் திரு முன்பு
போரேற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார் - 4.4.17

1063 - சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்று
பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து
சுவலோடுவார் அலையப் போவார் பின் பொரு சூழல்
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார் - 4.4.18

1064 - வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால்
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான்
இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து
நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார் - 4.4.19

1065 - இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி
மெய்த் திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த
சித்தமொடுந் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப - 4.4.20

1066 - அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்த
ஒன்றியணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார்
நன்றுமெழுங் காதல் மிக நாளைப் போவேன் என்பார் - 4.4.21

1067 - . நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார் - 4.4.22

1068 - செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார் - 4.4.23

1069 - நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன்
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார்
குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுகள் - 4.4.24

1070 - இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி
அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல்
ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே
செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார் - 4.4.25

1071 - இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினெடுந் துயில்வார் - 4.4.26

1072 - இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு
முன் அணைந்து கனவின் கண் முறுவலோடும் அருள் செய்வார் - 4.4.27

1073 - இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி
முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அப் பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார் - 4.4.28

1074 - தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித்
தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார் - 4.4.29

1075 - ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப
நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார் - 4.4.30

1076 - மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப்
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார் - 4.4.31

1077 - கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார்
எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப்
பொய் தகையும் உருவொழித்துப் புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார் - 4.4.32

1078 - செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார் - 4.4.33

1079 - திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களிப் பயின்றார்
அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர் - 4.4.34

1080 - தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி
ஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால் - 4.4.35

1081 - அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார்
வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து
சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார் - 4.4.36

1082 - மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசுடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவிளைப்
பாசம் உற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம் - 4.4.37

திருச்சிற்றம்பலம்

4.5 திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் (1083 - 1210 )

திருச்சிற்றம்பலம்



1083 - ஏயுமாறு பல் உயிர்களுக்கு எல்லையில் கருணைத்
தாய் ஆனாள் தனி ஆயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்ற நின்று அரும் தவம் புரியத்
தூய மாதவம் செய்தது தொண்டை நல் நாடு - 4.5.1

1084. - நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமை சால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கு எயில் வளம் பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ் பெரும் தொண்டை நல் நாடு - 4.5.2

1085. - நற்றிறம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவை வந்து
உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு கால்
சொற்ற மெய்ம்மையும் தூக்கி அச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெரும் தொண்டை நாடு - 4.5.3

1086. - ஆணையாம் என நீறு கண்டு அடிச்சேரன் என்னும்
சேண் உலாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு
வாண் நிலாவு பூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது பெரும் தொண்டை நாடு - 4.5.4

1087. - கறை விளங்கிய கண்டர் பாற் காதல் செய் முறைமை
நிறை புரிந்திட நேர் இழை அறம் புரிந்த அதனால்
பிறை உரிஞ்சு எயில் பதியில் பெரும் தொண்டை நாட்டு
முறைமையாம் என உலகினில் மிகு மொழி உடைத்தால் - 4.5.5

1088. - தாவில் செம்மணி அருவியாறு இழிவன சாரல்
பூவில் வண்டு இனம் புது நறவு அருந்துவ புறவம்
வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் - 4.5.6

1089. - குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம்
பறவை தாமரை இருந்து இற வருந்துவ பழனம்
சுறவ முள் மருப்பு அணங்கு அயர்வன கழிச் சூழல் - 4.5.7

1090. - கொண்டல் வானத்தின் மணி சொரிவன குல வரைப்பால்
தண்டு உணர்க் கொன்றை பொன் சொரி தள வயற்பால்
வண்டல் முத்த நீர் மண்டு கால் சொரிவன வயற்பால்
கண்டல் முன் துறைக் கரி சொரி வனகலங் கடற்பால் - 4.5.8

1091. - தேன் நிறைந்த செந்தினை இடி தரு மலைச் சீறூர்
பால் நிறைந்த புல் பதத்தன முல்லை நீள் பாடி
தூ நெல் அன்னம் நெய் கன்னலின் கனிய தண் துறையூர்
மீன் நிறைந்த பேர் உணவின வேலை வைப்பு இடங்கள் - 4.5.9

1092. - குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென் கிளி மருதமர் சேக்கைய மருதம்
நிழல் செய் கைதை சூழ் நெய்தலங் கழியன நெய்தல் - 4.5.10

1093. - மல்கும் அப்பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும்
பல் பெரும் புனம் பயில்வன படர் சிறைத் தோகை
சொல்லும் அப்புனங் காப்பவும் சுரி குழல் தோகை - 4.5.11

1094. - அங்கண் வான்மிசை அரம்பையர் கரும் குழல் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல் மூழ்கிப் போகாச்
செம் கண் மால் விடையார் திருக்காளத்தி என்னும்
மங்குல் சூழ் வரை நிலவிய வாழ்வினால் மல்கும் - 4.5.12

1095. - பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து
மாறில் வேடரும் மாதரும் ஆகவே வணங்கும்
ஆறுசூழ் சடை அண்ணலார் திரு விடைச் சுரமும்
கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி - 4.5.13

1096 - அம்பொன் வார் குழல் கொடிச்சியர் உடன் அர மகளிர்
வம்புலா மலர்ச் சுனை படிந்து ஆடு நீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக் கழுக் குன்றமும் உடைத்தால்
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவங்குறை உளதோ? - 4.5.14

1097. - கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில்லிடங்கள்
நீல வாள் படை நீல கோட்டங்களும் நிரந்து
கால வேனிலில் கடும் பகல் பொழுதினைப் பற்றிப்
பாலையும் சொலல் ஆவன உள பரல் முரம்பு - 4.5.15

1098. - சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச் சுரும்பு அலைக்கும்
பல் பெரும் புனல் கானியாறிடை இடை பரந்து
கொல்லை மெல் இணர்க் குருந்தின் மேற் படர்ந்த பூம்பந்தர்
முல்லை மென் புதல் முயல் உகைத்து தடங்கு நீள் முல்லை - 4.5.16

1099. - பிளவு கொண்ட தண் மதி நுதல் பேதையர் எயிற்றைக்
களவு கொண்டது அளவு எனக் களவலர் தூற்றும்
அளவு கண்டவர் குழல் நிறம் கனியும் அக் களவைத்
தளவு கண்டு எதிர் சிரிப்பன தமக்கும் உண்டு என்று - 4.5.17

1100. - மங்கையர்க்கு வாள் விழியிணை தோற்ற மான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கு இடை மலர்க் கொடி எங்கும்
அங்கண் முல்லையின் தெய்வம் என்று அருந் தமிழ் உரைக்கும்
செங்கண் மால் தொழும் சிவன் மகிழ் திரு முல்லை வாயில் - 4.5.18

1101. - நீறு சேர் திரு மேனியர் நிலாத் திகழ் முடிமேல்
மாறில் கங்கை தான் அவர்க்கு மஞ்சனந்தர அணைந்தே
ஊறு நீர் தரும் ஒளி மலர்க் கலிகை மா நகரை
வேறு தன் பெரு வைப்பு என விளங்கு மாமுல்லை - 4.5.19

1102. - வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்
வீசு தெண்டிரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி
பாசடைத் தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும்
பூசல் வன் கரைக் குளங்களும் ஏரியும் புகுவ - 4.5.20

1103. - துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரி பால்
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால் வரை மிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலொடு மணிகள்
பங்கயத் தடம் நிறைப்ப வந்து இழிவது பாலி - 4.5.21

1104. - பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய் போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி - 4.5.22

1105. - அனையவாகிய நதி பரந்து அகன் பணை மருங்கில்
கனை நெடும் புனல் நிறைந்து திண் கரைப் பெருங்குளங்கள்
புனை இருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம் போய்
வினைஞர் ஆர்ப்பொலி எடுப்ப நீர் வழங்குவ வியன்கால் - 4.5.23

1106. - மாறில் வண் பகட்டேர் பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவர் ஆன
வேறு பல் வினை உடைப் பெரும் கம்பலை மிகுமால் - 4.5.24

1107. - வரும் புனல் பெரும் கால்களை மறித்திட வாளை
பெருங்குலைப்பட விலங்குவ பிறங்கு நீர்ப் பழனம்
நெருங்கு சேற்குலம் உயர்த்துவ நீள் கரைப் படுத்துச்
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன பரு வரால் தொகுதி - 4.5.25

1108. - தளைத்த தடம் பணை எழுந்த செந்தாமரைத் தவிசின்
இளைத்த சூல் வளை கண் படுப்பன இடை எங்கும்
விளைத்த பாசொளி விளங்கு நீள் விசும்படை ஊர் கோள்
வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு - 4.5.26

1109. - ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழைக் கரும்பு
பூங்கரும்பு அயல் மிடைவன பூகம் அப்பூகப்
பாங்கு நீள் குலைத் தெங்கு பைங்கதலி வண் பலவு
தூங்கு தீங்கனிச் சூத நீள் வேலிய சோலை - 4.5.27

1110. - நீடு தண் பணை உடுத்த நீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய விருந்து எதிர் கொள்ளும்
பீடு தங்கிய பெருங் குடி மனை அறம் பிறங்கும்
மாடம் ஓங்கிய மறுகின மல்லல் மூதூர்கள் - 4.5.28

1111 - தொல்லை நான்மறை முதல் பெரும் கலையொலி துவன்றி
இல்லறம் புரிந்து ஆகுதி வேள்வியில் எழுந்த
மல்கு தண் புகை மழை தரும் முகில் குலம் பரப்பும்
செல்வம் ஓங்கிய திருமறையவர் செழும் பதிகள் - 4.5.29

1112 - தீது நீங்கிடத் தீக் கலியாம் அவுணற்கு
நதார் தாம் அருள் புரிந்தது நல்வினைப் பயன் செய்
மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும் - 4.5.30

1113. - அருவி தந்த செம் மணிகளும் புறவில் ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின்
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற் பேறாம்
பொருவில் கோயிலும் சூழ்ந்தப் பூம்பணை மருதம் - 4.5.31

1114. - விரும்பு மேன்மையென் பகர்வது விரி திரை நதிகள்
அருங்கரைப் பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து
பருங்கை யானையை உரித்தவர் இருந்த அப் பாசூர்
மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் - 4.5.32

1115 - . பூ மரும் புனல் வயல் களம் பாடிய பொருநர்
தாமருங் கிளையுடன் தட மென் மலர் மிலைந்து
மா மருங்கு தண்ணீழலின் மருத யாழ் முரலும்
காமர் தண் பணைப் புறத்தது கருங்கழி நெய்தல் - 4.5.33

1116 - . தூய வெண் துறைப் பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள் விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேர் அளத் தளவர்கள் அளப்பன உப்பு
சாயன் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம் - 4.5.34

1117 - .கொடு வினைத் தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படு மணற் கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடு கடல் சங்கு துறையவர் குளிப்பன அவர் தம்
வடு வகிர்க் கண்மங்கையர் குளிப்பன மணற்கேணி - 4.5.35

1118 - .கழிப் புனல் கடல் ஓதமுன் சூழ்ந்து கொண்டு அணிய
வழிக் கரைப் பொதி பொன்னவிழ்ப்பன மலர்ப் புன்னை
விழிக்கு நெய்தலின் விரை மலர்க் கட்சுரும்பு உண்ணக்
கழிக்கரைப் பொதி சோறு அவிழ்ப்பன மடற்கைதை - 4.5.36

1119 - . காயல் வண் கரைப் புரை நெறி அடைப்பன கனி முட்
சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும் முண்டகங்கள்
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம்
தாய முன்றுறைச் சூழல் சூழ் ஞாழலின் தாது - 4.5.37

1120 - . வாம் பெருந் திரைவளாக முன் குடி பயில் வரைப்பில்
தாம் பரப்பிய கயல்களின் விழிக் கயல் தவிரக்
காம்பி நேர் வருந் தோளியர் கழிக் கயல் விலை செய்
தேம் பொதிந்த சின் மழலை மென் மொழிய செவ்வழி யாழ் - 4.5.38

1121 - .மருட்கொடுந் தொழில் மன்னவன் இறக்கிய வரியை
நெருக்கி முன் திருவொற்றியூர் நீங்க என்று எழுதும்
ஒருத்தர் தம் பெரும் கோயிலின் ஒரு புறம் சூழ்ந்த
திருப் பரப்பையும் உடைய அத் திரைக் கடல் வரைப்பு - 4.5.39

1122 - .மெய் தரும் புகழ்த் திரு மயிலா புரி விரை சூழ்
மொய் தயங்கு தண் பொழில் திருவான்மியூர் முதலாப்
பை தரும் பணி அணிந்தவர் பதி எனைப் பலவால்
நெய்தல் எய்த முன் செய்த அம் நிறை தவம் சிறிதோ - 4.5.40

1123 - . கோடு கொண்டு எழும் திரைக் கடல் பவள மென் கொழுந்து
மாடு மொய் வரைச் சந்தனச் சினை மிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால்
ஆடு நீள் கொடி மாட மா மல்லையே அனைய - 4.5.41

1124 - .மலை விழிப்பன என வயல் சேல் வரைப் பாறைத்
தலையுகைப்பவும் தளைச் செறு விடை நெடுங் கருமான்
குதிப்பன கரும் பகட்டேர் நிகர்ப்பவுமாய்
அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் - 4.5.42

1125 - .புணர்ந்த ஆனிரை புற விடைக் குறு முயல் பொருப்பின்
அணைந்த வான் மதி முயலினை இனம் என அணைந்து
மணங்கொள் கொல்லையில் வரகு போர் மஞ்சனம் வரைக்கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும் - 4.5.43

1126 - .கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்து
சிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள்
அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும்
உவரி நெய்தலும் கானமும் கலந்துள ஒழுக்கம் - 4.5.44

1127 - .அயல் நறும் புறவினில் இடைச்சியர் அணி நடையும்
வியன் நெடும் பணை உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும் எதிர் எதிர் பயில
வயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு - 4.5.40

1128 - .மீளும் ஓதமுன் கொழித்த வெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலில் பரத்தியர் பணை மென்
தோளும் உழத்தியர் மகளிர் மாறாடி முன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள் - 4.5.46

1129 - .ஆய நானிலத்து அமைதியில் தத்தமக்கு அடுத்த
மேய செய் தொழில் வேறு பல் குலங்களின் விளங்கித்
தீய என்பன கனவிலும் நினைவு இலாச் சிந்தைத்
தூய மாந்தர் வாழ் தொண்டை நாட்டு இயல்பு சொல் வரைத்ததோ? - 4.5.47

1130 - . இவ் வளம் தரு பெரும் திருநாட்டிடை என்றும்
மெய் வளந் தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ்வுகங்களும் உள்ளது என்று யாவரும் ஏத்தும்
கை விளங்கிய நிலையது காஞ்சி மா நகரம் - 4.5.48

1131 - .ஆன தொல் நகர் அம்பிகை தம் பெருமானை
மான அர்ச்சனை யால் ஒரு காலத்து வழிபட்டு
ஊனமில் அறம் அனேகமும் உலகுய்ய வைத்த
மேன்மை பூண்ட அப் பெருமையை அறிந்தவா விளம்பில் - 4.5.49

1132 - .வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்று இருந்து அருளித்
துள்ளு வார் புனல் வேணியர் அருள் செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெரிய
உள்ளவாறு கேட்டு அருளினான் உலகை ஆளுடையாள் - 4.5.50

1133 - . எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்
உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவள் ஆயின பெருந் தவக் கொழுந்து - 4.5.51

1134 - . நங்கை உள் நிறை காதலை
நோக்கி நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது
என் கொல் நின் பால் என வினவ
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின்
இயல்பினால் உனை அர்ச்சனை புரியப்
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி
போகமார்த்த பூண் முலையினாள் போற்ற - 4.5.52

1135 - . தேவ தேவனும் அது திருவுள்ளஞ்
செய்து தென் திசை மிக்க செய் தவத்தால்
யாவரும் தனை அடைவது மண் மேல்
என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து
மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு
கொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள் - 4.5.53

1136 - . ஏதமில் பலயோனி எண் பத்து
நான்கு நூறு ஆயிரத்து அதனுள்
பேதமும் புரந்து அருளும் அக் கருணைப்
பிரான் மொழிந்த ஆகம வழி பேணிப்
போது நீர்மையில் தொழுதனள் போதப்
பொருப்பில் வேந்தனும் விருப்பில் வந்து எய்தி
மா தவம் புரிந்து அருளுதற்கு அமைந்த
வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான் - 4.5.54

1137 - . துன்னு பல்லுயிர் வானவர் முதலாச்
சூழ்ந்து உடன் செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர் வரும் பதும மா நாகம் தம்பிராட்டி
தாள் தலைமிசை வைத்தே
அன்னையாய் உலகு அனைத்தையும்
ஈன்றாய் அடியனேன் உறை பிலம் அதன் இடையே
மன்னு கோயில் கொண்டு அருளுவாய்
என்ன மலை மடந்தை மற்று அதற்கு அருள் புரிந்து - 4.5.55

1138 - . அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப
அளவில் இன்பத்தின் அருட் கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரி சடையார்க்குத்
திருந்து பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவும் திரு விளையாட்டால்
ஏக மா முதல் எதிர்ப்படாது ஒழியப்
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே
புரிவு செய்தனள் பொன் மலை வல்லி - 4.5.56

1139 - . நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி
நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்செழுத்துமே ஆக ஆளுடைய
அம்மை செம்மலர்க் கை குவித்து அருளித்
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரியத்
தரிப்பரே அவள் தனிப் பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில்
வந்து தோன்றினார் மலை மகள் காண - 4.5.57

1140 - . கண்ட போதில் அப்பெரும் தவப்
பயனாம் கம்பம் மேவிய தம் பெருமானை
வண்டு உலாங் குழல் கற்றை முன் தாழ
வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்பளவு இன்றிக்
குறித்த பூசனை கொள்கை மேற் கொண்டு
தொண்டையங்கனி வாய் உமை நங்கை
தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள் - 4.5.58

1141 - . உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம்
உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு
இயல்பில் வாழ் திருச் சேடியரான
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு
அணையக் குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன
தூ நறும் புது மலர் கொய்தாள் - 4.5.59

1142 - . கொய்த பன்மலர் கம்பை மா நதியில்
குலவு மஞ்சனம் நிலவு மெய்ப் பூச
நெய் தரும் கொழும் தூப தீபங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய் தரும்படி வேண்டின எல்லாம்
வேண்டும் போதினில் உதவ மெய்ப் பூச
எய்த ஆகம விதி எலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி - 4.5.60

1143 - . கரந்தரும் பயன் இது என உணர்ந்து
கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி நீடு
நன்மைகள் யாவையும் பெருக
வரம் தரும் பொருளாம் மலை வல்லி
மாறிலா வகை மலர்ந்த பேர் அன்பால்
சிரம் பணிந்து எழு பூசை நாள் தோறும்
திரு உளம் கொளப் பெருகியது அன்றே - 4.5.61

1144 - . நாதரும் பெரு விருப்பொடு நயந்து
நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்
காதல் மிக்கவோர் திரு விளையாட்டில்
கனங்குழைக்கு அருள் புரிந்திட வேண்டி
ஓத மார் கடல் ஏழும் ஒன்று ஆகி ஓங்கி
வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல் வரக் கம்பை
வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார் - 4.5.62

1145 - . அண்ணலார் அருள் வெள்ளத்தை
நோக்கி அம் கயல் கண்ணி தம் பெருமான் மேல்
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம்
மீது வந்துறும் என வெருக் கொண்டே
உண்ணிலாவிய பதைப்புறு காதலுடன்
திருக் கையால் தடுத்தும் நில்லாமை
தண்ணிலா மலர் வேணியினாரைத்
தழுவி கொண்டனள் தன்னையே ஒப்பாள் - 4.5.63

1146 - . மலைக் குலக் கொடி பரிவுறு பயத்தால்
மாவின் மேவிய தேவ நாயகரை
முலைக்குவட்டொடு வளைக் கையால்
நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத் தனித் திருநுதல் திரு முலைக்கும்
செந் தளிர்க் கரங்களுக்கும் மெத்தெனவே
கொலைக் களிற்றுரி புனைந்த தம் மேனி
குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார் - 4.5.64

1147 - . கம்பர் காதலி தழுவ மெய் குழைய
கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்பரே முதல் யோனிகள் எல்லாம்
உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார்
என்றும் ஏகம்பர் என்று எடுத்து ஏத்த
வம்புலா மலர் நிறைய விண் பொழியக்
கம்பையாறு முன் வணங்கியது அன்றே - 4.5.65

1148 - . பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு
கங்கை தோய் முடிச் சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ்
வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு
வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார் - 4.5.66

1149 - . கோதிலா அமுது அனையவள் முலைக்
குழைந்த தம் மணவாள நல் கோலம்
மாது வாழவே காட்டி முன் நின்று வரங்கள்
வேண்டுவ கொள்க என்று அருள
வேத காரணராய ஏகம்பர் விரை மலர்ச்
செய்ய தாமரை கழல் கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை
தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி - 4.5.67

1150 - . அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும்
அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பிக்
கொண்ட இற்றை என் பூசனை இன்னும்
குறை நிரம்பிடக் கொள்க என்று அருள
வண்டு வார் குழல் மலை மகள் கமல வதனம்
நோக்கி அம்மலர்க் கண் நெற்றியின் மேல்
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும்
முடிவதில்லை நம் பால் என மொழிய - 4.5.68

1151 - . மாறிலாத இப் பூசனை என்றும் மன்ன
எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி
ஈறிலாத இப்பதியினுள் எல்லா அறமும்
யான் செய அருள் செய வேண்டும்
வேறு செய் வினை திருவடிப் பிழைத்தல்
ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன் கொடுத்து அருளப்
பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள் - 4.5.69

1152 - . விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவி வீற்று இருந்தே
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக
இக பர திரு நாழி நெல் அளித்துக்
கடையர் ஆகியும் உயர்ந்தவர் ஆகியும்
காஞ்சி வாழ்பவர் தாம் செய் தீவினையும்
தடைபடாது மெய்ந் நெறி அடைவதற்காம்
தவங்களாகவும் உவந்து அருள் செய்தார் - 4.5.70

1153 - . எண்ண அரும் பெரும் வரங்கள் முன்
பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி
மனை அறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலின் நீடிய வாழ்க்கைப்
புண்ணிய திருக் காம கோட்டத்துப்
பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும் - 4.5.71

1154 - . அலகில் நீள் தவத்து அறப் பெரும்
செல்வி அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம்
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க
ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும்
நீடு தொன்மையால் நிறந்த பேர் உலகம்
மலர் பெரும் திருக் காம கோட்டத்து
வைத்த நல்லறம் மன்னவே மன்னும் - 4.5.72

1155 - . தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும்
சிறப்பினால் திருக் காமக் கோட்டத்தின்
பாங்கு மூன்றுலகத்தில் உள்ளோரும்
பரவு தீர்த்தமாம் பைம் புனற்கேணி
வாங்கு தெண் திரை வேல்கை மேகலை
சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும்
உள்ளது ஒன்று உலகாணி என்று உளதால் - 4.5.73

1156 - . அந்தம் இன்றி நல் அறம் புரிந்து
அளிக்கும் அன்னை தன் திருக் காமக் கோட்டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது வழிக் கொள்ளாத
தன் மருங்கு போலினால்
சந்த மாதிர மயங்கி எம் மருங்கும்
சாயை மாறிய தன் திசை மயக்கும்
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும்
உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளதால் - 4.5.74

1157 - . கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில்
காஞ்சியாம் திரு நதிக் கரை மருங்கு
சென்னியிற் பிறை அணிந்தவர் விரும்பும்
திருப் பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து
மன்னு வெங் கதிர் மீது எழும் போதும்
மறித்து மேற் கடல் தலை விழும் போதும்
தன்னிழல் பிரியாத வண் காஞ்சித் தானம்
மேவிய மேன்மையும் உடைத்தால் - 4.5.75

1158 - . மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து
மாறுறிலா நியமம் தலை நின்று
முறைமையால் வரும் பூசனை செய்ய
முனிவர் வானவர் முதல் உயிர் எல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு
ஆகமங்கள் அவர் அவர்க்கு அருளி
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள்
எண்ணிறந்த அத் திரு நகர் எல்லை - 4.5.76

1159 - . மன்னு கின்ற அத் திருநகர் வரைப் பின்
மண்ணில் மிக்கதோர் நன்மை யினாலே
துன்னும் யானையைத் தூற்றில் வாழ் முயல்
முன் துரக்க எய்திய தொலைவு இல் ஊக்கத்தால்
தன்னிலத்து நின்று அகற்றுதல் செய்யும்
தானம் அன்றியும் தனு எழும் தரணி
எந் நிலைத்தினும் காண்பரும் இறவாத்
தானம் என்று இவை இயல்பினில் உடைத்தால் - 4.5.77

1160 - . ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய்
விளங்கு தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம் மூன்று உலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமு முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும் அமரர்
நாட்டவர் ஆடுதல் ஒழியார் - 4.5.78

1161 - . தாளது ஒன்றினில் மூன்று பூ மலரும்
தமனியச் செழும் தாமரைத் தடமும்
நீள வார் புனல் குடதிசை ஓடி நீர்
கரக்கு மா நதியுடன் நீடு
நாள் அலர்ந்து செங்குவளை பைங் கமலம்
நண்பகல் பகல் தரும் பாடலம் அன்றிக்
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில்
கண் படாத காயாப் புளி உளதால் - 4.5.79

1162 - . சாயை முன் பிணிக்கும் கிணறு
ஒன்று தஞ்சம் உண்ணின் நஞ்சாந்தடம் ஒன்று
மாயை இன்றி வந்துள்ளடைந்தார்கள்
வானரத்து உருவாம் பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும்
விளங்க பொய்கையும் ஒன்று விண்ணவரோடு
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு
அனைய ஆகிய அதிசயம் பலவால் - 4.5.80

1163 - . அஞ்சு வான் கரத்தாறு இழி மதத்தோர்
ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலும் மா மேனி மலர்ப்
பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்க எயிற்று அரவ வெற்றுத் தரையின்
நாம மூன்றிலை படை உடைப் பிள்ளை
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம்
எறிந்த வேலவன் காக்கவும் இசையும் - 4.5.81

1164 - . சத்தி தற் பரசித்தி யோகிகளும்
சாதகத் தனி தலைவரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள் மெய்த் தவர்கள்
நீடுவாழ் திருப் பாடியும் அனேகம்
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர்
திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்தி
வித்தகக் கரி மேற் கொளும் காரி மேவும்
செண்டு அணை வெளியும் ஒன்று உளதால் - 4.5.82

1165 - . வந்து அடைந்தவர் தம் உரு மாய மற்று
உளாரைத் தாம் காண்பிடம் உளது
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள்
சேரும் யோக பீடமும் உளது என்றும்
அந்தமில் அறம் புரப்பவள் கோயில்
ஆன போக பீடமும் உளதாகும்
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை
எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார் - 4.5.83

1166 - .தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள்
துரக்கும் சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும்
மெய்ந் நெறிக் கணின்றார்கள் தாம் விரும்பித்
தீண்டில் யாவையும் செம் பொன்
ஆக்குவது ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிதால்
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும்
அகில யோனியும் அளிக்கும் அந் நகரம் - 4.5.84

1167 - .என்றும் உள்ள இந் நகர் கலியுகத்தில்
இலங்கு வேற்கரிகால் பெருவளத்தோன்
வன் திறற்புலி இமயமால் வரை மேல்
வைக்க ஏகுவேன் தனக்கு இதன் வளமை
சென்று வேடன் முன் கண்டு உரை செய்யது
இருந்து காத நான்கு உட்பட வகுத்துக்
குன்று போலும் மா மதில் புடை போக்கிக்
குடி இருத்தின கொள்கையின் விளங்கும் - 4.5.85

1168 - . தண் காஞ்சி மென் சினைப் பூம் கொம்பர்
ஆடல் சார்ந்து அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலிப்
பணை மருதம் புடை உடைத்தாய்ப் பாரில் நீடும்
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த
செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ
வண் காஞ்சி அல்குல் மலை வல்லி காக்க வளர்
கருணைக் கடல் உலகம் சூழ்ந்தால் மானும் - 4.5.86

1169 - . கொந்தலர் பூங் குழல் இமயக் கொம்பு
கம்பர் கொள்ளும் பூசனைக் குறித்த தானம் காக்க
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த
வாய்மை ஆகம விதியின் வகுப்புப் போலும்
அந்தமில் சீர்க் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு
அன்றி அடைகளங்கம் அறுப்பர் என்றுஅறிந்து சூழ
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும்
மா கடலும் போலும் மலர்க் கிடங்கு மாதோ - 4.5.87

1170 - .ஆங்கு வளர் எயிலினுடன் விளங்கும்
வாயில் அப்பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல
ஓங்கு நிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய
உமைபாகர் அருள் செய்த ஒழுக்கம் அல்லால்
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகிச்செந்
நெறிக்கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம்
தாங்குலவ நிலவி வளர் ஒளியால் என்றும் தட
நெடுவான் அளப்பன வாம் தகைய வாகும் - 4.5.88

1171 - .மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி
மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த
நகர் அணி வரைகள் நடுவு போக்கிக்
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்கக் கொண்ட
அனேகம் கண்டம் ஆகி அன்ன
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன
விளங்கிய மா லோக நிலை மேவிற்று அன்றே - 4.5.89

1172. -பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து
நீண்ட படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல்
தோகையர் தம் குழாம் அலையத் தூக்கு முத்தின்
சுடர்க் கோவைக் குளிர் நீர்மை துதைந்த வீதி
மாகமிடை ஒளி தழைப்ப மன்னி நீடு மருங்கு
தாரகை அலைய வரம்பில் வண்ண
மேகமிடை கிழித்து ஒழுகும் தெய்வக் கங்கை
மேல் நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும் - 4.5.90

1173. -. கிளர் ஒளிச் செங்கனக மயந்தானாய்
மாடு கீழ் நிலையோர் நீலச் சோபனம் பூணக்
கொள அமைத்து மீது ஒருபால் அன்ன சாலை
குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே
அளவில் சுடர்ப் பிழம்பு ஆனார் தம்மைத் தேடி
அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு
மாளிகையும் உள மற்று மறுகு தோறும் - 4.5.91

1174. -மின் பொலி பன் மணி மிடைந்த தவள
மாடம் மிசைப் பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது
பொன் புரையும் செக்கர் நிறப் பொழுது தோன்றும்
புனிற்றி மதி கண்டு உருகிப் பொழிந்த நீரால்
வன் புலியின் உரியாடைத் திரு ஏகம்பர் வளர்சடையும்
இளம் பிறையும் கண்டு கும்பிட்டு
அன்பு உருகி மெய் பொழியக் கண்ணீர் வாரும்
அடியவரும் அனையவுள அலகிலாத - 4.5.92

1175. -முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய
ஆகும் முழுப் பளிங்கின் மாளிகைகள் முற்றும் சுற்றும்
நிகரில் சரா சரங்கள் எல்லாம் நிழலினாலே
நிறைதலின் ஆல் நிறை தவஞ்செய் இமயப் பாவை
நகில் உழுத சுவடும் வளைத் தழும்பும் பூண்ட
நாயகனார் நான்கு முகற்குப் படைக்க நல்கும்
அகிலயோனிகள் எல்லாம் அமைத்து வைத்த
அரும் பெரும் பண்டார நிலை அனைய ஆகும் - 4.5.93

1176. -பொன் களப மாளிகை மேல் முன்றில்
நின்று பூம் கழங்கு மணிப் பந்தும் போற்றி ஆடும்
வில் புருவக் கொடி மடவார் கலன்கள் சிந்தி
விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்
அற்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும்
அணிமணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி
நற்கனக மழை அன்றிக் காஞ்சி எல்லை
நவமணி மாரியும் பொழியும் நாளும் நாளும் - 4.5.94

1177. -பூ மகளுக்கு உறையுள் எனும்
தகைய ஆன பொன் மாடத் தரமியங்கள் பொலிய நின்று
மா மகரக் குழை மகளிர் மைந்தர் அங்கண்
வந்து ஏறுமுன் நறு நீர் வண்டல் ஆடத்
தூமணிப் பொன் புனை நாளத்துருத்தி வீசும்
சுடர்விடு செங்குங்கும நீர்த் துவலை தோய்ந்த
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும்
கருமுகில்கள் செம்முகில் களாகிக் காட்டும் - 4.5.95

1178. -இமம் மலிய எடுத்த நெடு வரைகள்
போல இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச்
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும்
தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர் களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்
தங்களையும் விசும்பிடை நின்று இழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வேறு
அறிவரிதாம் தகைமையன அனேகம் அங்கண் - 4.5.96

1179. -அரவ நெடுந் தேர் வீதி அருகு மாடத்து
அணிமணிக் கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட
விரவு மரகதச் சோதி வேதித் திண்ணை
விளிம்பின் ஒளி துளும்பு முறைப் படி மீது ஏறும்
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும்
குழம்பு அடுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கித் தோன்றும்
பவள நறும் தளிர் அனைய பலவும் பரங்கர் - 4.5.97

1180. -வேம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின்
ஆர்ப்பும் வியன் நெடுந் தேர்க் கால் இசைப்பும் விழவுஅறாத
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும்
அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்குந்
தெய்வ உயர் இரவி மாக் கலிப்பும் அயன் ஊர்தித் தேர்
பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப்
பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும் - 4.5.98

1181. -அருமறை அந்தணர் மன்னும்
இருக்கையான ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாடப்
பெரு மறுகு தொறும் வேள்விச் சாலை
எங்கும் பெறும் அவிப் பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைக்க விடு மந்திரம் எம்
மருங்கும் வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில்
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும்
எல்லாத் தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும் - 4.5.99

1182. - அரசர் குலப் பெரும் தெருவும்
தெற்றி முற்றத்து ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்
புரசை மதக் கரிகளொடு புரவி ஏறும்
பொற்புடைய வீதிகளும் பொலிய எங்கும்
விரை செய் நறுந்தொடை அலங்கல் குமரர்
செய்யும் வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்
நிரை செறியும் விமான ஊர்திகளின் மேலும்
நிலமிசையும் பல முறையும் நிரந்து நீங்கார் - 4.5.100

1183. -வெயில் உமிழும் பன்மணிப்
பூண் வணிக மாக்கள் விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க
வயின் நிலவு மணிக் கடை மா நகர்கள்
எல்லாம் வனப்பு உடைய பொருட்குலங்கள் மலிதலாலே
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள்
பலவும் கம்பமுமேவிய தன்மை கண்டு போற்றப்
பயிலும் உருப்பல கொண்டு நிதிக் கோன்
தங்கப் பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும் - 4.5.101

1184. - விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின்
வேளாண் விழுக் குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்
பொன் மலைவல்லிக் களித் தவளர் உணவின் மூலம்
தொழ உலகு பெறும் அவள் தான் அருள
பெற்றுத் தொன்னிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவுத் தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம்
ஓங்க வரும் தரும வினைக்கு உளரால் என்றும் - 4.5.102

1185. - ஓங்கிய நால் குலத்து ஒவ்வாப்
புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாம் குழுமிப் பிறந்த குல பேதம் எல்லாம் தம்
தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற அடுத்த
வினைத் தொழிலின் முறைமை வழாமை நீடு
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம்
பண்பு நீடிய உரிமைப் பால அன்றே - 4.5.103

1186. - ஆதி மூதெயில் அந் நகர் மன்னிய
சோதி நீள் மணித் தூபமும் தீபமும்
கோதில் பல்லியமும் கொடியும் பயில்
வீதி நாளும் ஒழியா விழா வணி - 4.5.104

1187. - வாயில் எங்கணும் தோரணம் மாமதில்
ஞாயில் எங்கணுஞ் சூழ் முகில் நாள்மதி
தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குலக் குழாம் - 4.5.105

1188. - வேத வேதியர் வேள்வியே தீயன
மாதர் ஓதி மலரே பிணியன
காதல் வீதி விலக்கே கவலைய
சூத மாதவியே புறம் சூழ்வன - 4.5.106

1189. - சாயலார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாடக் கொடியே அசைவன
சேய ஓடைக் களிறே திகைப்பன
பாய சோலைத் தருவே பயத்தன - 4.5.107

1190. - அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன
தண்ணறுஞ் செழுந்தாதே துகள்வன
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன
எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின - 4.5.108

1191. - வென்றி வானவர் தாம் விளையாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது - 4.5.109

1192. - புரம் கடந்தவர் காஞ்சி புரம் புகழ்
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும்
வரம்பில் போக வனப்பின் வளமெல்லாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்தலால் - 4.5.110

1193. - அவ்வகைய திருநகரம் அதன் கண் ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்துள்ளார்
செவ்விய அன்புடை மனத்தார் சீலத்தின் நெறி நின்றார்
மை விரவு கண்டரடி வழித் தொண்டர் உளர் ஆனார் - 4.5.111

1194. - மண்ணின் மிசை வந்த அதற்பின் மனம் முதல் ஆயின மூன்றும்
அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார்
புண்ணிய மெய்த் தொண்டர் திருக் குறிப்பு அறிந்து போற்று நிலைத்
திண்மையினால் திருக் குறிப்புத் தொண்டர் எனும் சிறப்பினார் - 4.5.112

1195. - தேர் ஒலிக்க மா ஒலிக்கத் திசை ஒலிக்கும் புகழ்க் காஞ்சி
ஊரொலிக்கும் பெரு வண்ணார் எனவொண்ணா உண்மையினார்
நீரொலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார்
பேரொலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர் பெரு விருப்பி னொடும் - 4.5.113

1196. - தேசுடைய மலர்க் கமலச் சேவடியார் அடியார்தம்
தூசுடைய துகள் மாசு கழிப்பார் போல் தொல்லை வினை
ஆசுடைய மல மூன்றும் அணைய வரும் பெரும் பிறவி
மாசு தனை விடக் கழித்து வரும் நாளில் அங்கு ஒரு நாள் - 4.5.114

1197 - பொன் இமயப் பொருப் பரையன் பயந்து அருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்று அளக்க எழுந்து அருளும் நம் பெருமான்
தன்னுடைய அடியவர் தம் தனித் தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டு அன்பர்க்கு அருள் புரிவான் வந்து அணைவார் - 4.5.115

1198. - சீதமலி காலத்துத் திருக் குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலராய் மெலிந்து மிக அழுக்கு அடைந்த கந்தையுடன்
மாதவ வேடம் தாங்கி மால் அறியா மலர் அடிகள்
கோதடையா மனத்தவர் முன் குறு நடைகள் கொளக் குறுகி - 4.5.116

1199. - . திருமேனி வெண்ணீறு திகழ்ந்து ஒளிரும் கோலத்துக்
கரு மேகம் என அழுக்குக் கந்தையுடன் எழுந்து அருளி
வருமேனி அருந் தவரைக் கண்டு மனம் மகிழ்ந்து எதிர் கொண்டு
உருமேவும் மயிர்ப் புளகம் உளவாகப் பணிந்து எழுந்தார் - 4.5.117

1200. - எய்தும் அவர் குறிப்பு அறிந்தே இன் மொழிகள் பல மொழிந்து
செய் தவத்தீர் திருமேனி இளைத்து இருந்தது என் என்று
கை தொழுது கந்தையினைத் தந்து அருளும் கழுவ என
மை திகழ் கண்டம் கரந்த மாதவத்தோர் அருள் செய்வார் - 4.5.118

1201. - இக் கந்தை அழுக்கு ஏறி எடுக்க ஒணாது எனினும் யான்
மெய்க் கொண்ட குளிர்க் குடைந்து விட மாட்டேன் மேல் கடல் பால்
அக் குன்றம் வெங்கதிரோன் அணைவதன் முன் தருவீரேல்
கைக் கொண்டு போய் ஒலித்துக் கொடுவாரும் கடிது என்றார் - 4.5.119

1202. - தந்து அருளும் இக் கந்தை தாழாதே ஒலித்து உமக்கு இன்று
அந்தி படுவதன் முன்னம் தருகின்றேன் என அவரும்
கந்தை இது ஒலித்து உணக்கிக் கடிது இன்றே தாரீரேல்
இந்த உடற்கு இடர் செய்தீர் என்று கொடுத்து ஏகினார் - 4.5.120

1203. - குறித்த பொழுதே ஒலித்துக் கொடுப்பதற்குக் கொடு போந்து
வெறித் தடநீர்த் துறையின் கண் மா செறிந்து மிகப் புழுக்கிப்
பிறித்து ஒலிக்கப் புகும் அளவில் பெரும் பகல் போய்ப் பின்பகலாய்
மறிக்கரத்தார் திரு அருளால் மழை எழுந்து பொழிந்திமால் - 4.5.121

1204. - திசை மயங்க வெளியடைத்த செறி முகிலின் குழாம் மிடைந்து
மிசை சொரியும் புனல் தாரை விழி நுழையா வகை மிடைய
அசையுடைய மனத்து அன்பர் அறிவு மறந்து அருந்தவர் பால்
இசைவு நினைந்து அழிந்து இனி யான் என் செய்கேன் என நின்றார் - 4.5.122

1205 - ஓவாதே பொழியு மழை ஒரு கால் விட்டு ஒழியும் எனக்
காவாலி திருத் தொண்டர் தனி நின்றார் விடக் காணார்
மேவார் போல் கங்குல் வர மெய் குளிரும் விழுந்தவர் பால்
ஆ! ஆ! என் குற்றேவல் அழிந்த வா என விழுந்தார் - 4.5.123

1206 - விழுந்த மழை ஒழியாது மெய்த்தவர் சொல்லிய எல்லை
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு ஆற்று ஏற்க அறிந்திலேன்
செழும் தவர் தம் திருமேனி குளிர் கணும் தீங்கு இழைத்த
தொழும்பனேற்கு இனி இதுவே செயல் என்று துணிந்து எழுவார் - 4.5.124

1207. - கந்தை புடைத்திட எற்றும் கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று அணைந்து செழும் பாறை மிசைத்
தந்தலையைப் புடைத்து எற்ற அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி வளைத் தழும்பர் மலர்ச் செங்கை - 4.5.125

1208. - வான் நிறைந்த புனல் மழை போய் மலர் மழையாய் இட மருங்கு
தேன் நிறைந்த மலர் இதழித் திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும் வெளி நின்றார் மெய்த் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருகக் கை தொழுது தனி நின்றார் - 4.5.126

1209. - முன் அவரை நேர் நோக்கி முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும் இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய் என அருளி
அந் நிலையே எழுந்து அருளி அணி ஏகாம்பரம் அணைந்தார் - 4.5.127

1210. - சீர் நிலவு திருக் குறிப்புத் தொண்டர் திருத்தொழில் போற்றிப்
பார் குலவத் தந்தை தாள் அற எறிந்தார் பரிசு உரைக்கேன்
பேர் அருளின் மெய்த் தொண்டர் பித்தன் எனப் பிதற்றுதலால்
ஆருலகில் இதன் உண்மை அறிந்து உரைக்க இசைந்து எழுவார் - 4.5.128

திருச்சிற்றம்பலம்

4.6 சண்டேசுர நாயனார் புராணம் (1211 - 1270)

திருச்சிற்றம்பலம்



1211 - பூந்தண் பொன்னி எந் நாளும் பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு
வாய்ந்த மண்ணித் தென் கரையில் மன்ன முன் நாள் வரை கிழிய
ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி இமையோர் இகல் வெம் பகை கடக்கும்
சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞ்லூர் - 4.6.1

1212. - செம்மை வெண்ணீற்று ஒருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார்
தம்மை ஐந்து புலனும் பின் செல்லும் தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும் போற்றும் மறையோர் விளங்குவது - 4.6.2

1213. - கோதில் மான் தோல் புரி முந்நூல் குலவு மார்பில் குழைக் குடுமி
ஓதுகிடை சூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும்
போதின் விளங்கும் தாரகையும் மதியும் போலப் புணர் மாடங்கள்
மீது முழங்கு முகில் ஒதுங்க வேத ஒலிகள் முழங்குவன - 4.6.3

1214. - யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர் ஈந்த அவியுணவின்
பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறைப்புள்
மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன்
நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டமுள - 4.6.4

1215 - தீம் பால் ஒழுகப் பொழுது தொறும் ஓம தேனுச் செல்வனவும்
தாம் பாடிய சாமம் கணிப்போர் சமிதை இடம் கொண்டு அனைவனவும்
பூம் பாசடைநீர்த் தடம் மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும்
ஆம் பான்மையினில் விளங்குவன அணி நீள் மறுகு பலவுமுள - 4.6.5

1216 - வாழ் பொன் பதி மற்று அதன் மருங்கு மண்ணித் திரைகள் வயல் வரம்பின்
தாழ்வில் தரளம் சொரி குலைப்பால் சமைத்த யாகத் தடம் சாலை
சூழ் வைப்பு இடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்து ஏறும்
வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் - 4.6.6

1217 - மடையில் கழுநீர் செழுநீர் சூழ்வயலில் சாலிக் கதிர்க்கற்றைப்
புடையில் சுரும்பு மிடை கமுகு புனலில் பரம்பு பூம்பாளை
அடையில் பயிலுந் தாமரை நீள் அலரில் துயிலும் கயல்கள் வழி
நடையில் படர்மென் கொடி மௌவல் நனையில் திகழும் சினைக் காஞ்சி - 4.6.7

1218 - சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திரு எல்லை
பொன்னின் மயம் ஆக்கிய வளவர் போர் ஏறு என்றும் புவி காக்கும்
மன்னர் பெருமான் அநபாயன் வருந் தொல் மரபின் முடி சூட்டும்
தன்மை நிலவு பதி ஐந்தின் ஒன்றாய் நீடும் தகைத்தது அவ்வூர் - 4.6.8

1219 - பண்ணின் பயனாம் நல் இசையும் பாலி பயனாம் இண் சுவையும்
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் கருத்தின் பயனும் எழுத்து ஐந்தும்
விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப் பயனாம் சைவமும் போல்
மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்பு உடைத்தோ - 4.6.9

1220 - பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்முள் பெருமனை வாழ்
தருமம் நிலவு காசிய கோத்திரத்துத் தலைமை சால் மரபில்
அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவு போல்
இருமை வினைக்கும் ஒரு வடிவு ஆம் எச்ச தத்தன் உளனானான் - 4.6.10

1221 - மற்றை மறையோன் திரு மனைவி வாய்ந்த மரபின் வந்து உதித்தாள்
சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாள் உலகில் துணைப் புதல்வர்
பெற்று விளங்கும் தவம் செய்தாள் பெறும் பேறு எல்லைப் பயன் பெறுவாள்
பற்றை எறியும் பற்றுவார் சார்பாய் உள்ள பவித்திரையாம் - 4.6.11

1222 - . நன்றி புரியும் அவர் தம் பால் நன்மை மறையின் துறை விளங்க
என்றும் மறையோர் குலம் பெருக ஏழு புவனங்களும் உய்ய
மன்றில் நடம் செய்பவர் சைவ வாய்மை வளர மா தவத்தோர்
வென்றிவிளங்க வந்து உதயம் செய்தார் விசார சருமனார் - 4.6.12

1223 - ஐந்து வருடம் அவர்க்கு அணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த
சந்த மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள்
முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம் போல்
சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் - 4.6.13

1224 - நிகழும் முறைமை ஆண்டு ஏழும் நிரம்பும் பருவம் வந்து எய்தப்
புகழும் பெருமை உப நயனப் பொருவில் சடங்கு முடித்து அறிவின்
இகழு நெறிய அல்லாத எல்லாம் இயந்த எனினும் தம்
திகழு மரபின் ஓது விக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார் - 4.6.14

1225 - குலவு மறையும் பல கலையும் கொளுத்துவதன் முன் கொண்டு அமைந்த
நிலவும் உணர்வின் திறம் கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார்
அலகில் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே எனக் கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந் தகையார் - 4.6.15

1226 - நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் என்றும் மெய்ம்மை
உடனே தோன்றும் உணர்வின் கண் ஒழியாது ஊறும் வழி அன்பின்
கடனே இயல்பாய் முயற்றி வரும் காதல் மேல்மேல் எழும் கருத்தின்
திடம் நேர் நிற்கும் செம்மலார் திகழும் நாளில் ஆங்கு ஒரு நாள் - 4.6.16

1227 - ஓது கிடையின் உடன் போவார் ஊர் ஆன் நிரையின் உடன் புக்க
போது மற்று அங்கு ஒரு புனிற்றா போற்றும் அவன் மேல் மருப்பு ஓச்ச
யாதும் ஒன்றும் கூசாதே எடுத்த கோல் கொண்டு அவன் புடைப்ப
மீது சென்று மிகும் பரிவால் வெகுண்டு விலக்கி மெய் உணர்ந்து - 4.6.17

1228 - பாவும் கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால்
மேவும் பெருமை அரு மறைகள் மூலமாக விளங்கு உலகில்
யாவும் தெளிந்த பொருள் நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால்
ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற்கு அருள் செய்வார் - 4.6.18

1229 - தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையன
பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லாம் என்றும் பொருந்துவன
துங்க அமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத
அங்கம் அனைத்தும் தாமுடைய அல்லவோ? நல் ஆனினங்கள் - 4.6.19

1230 - ஆய சிறப்பினால் பெற்ற அன்றே மன்றுள் நடம் புரியும்
நாயனார்க்கு வளர் மதியும் நதியும் நகு வெண்டலைத் தொடையும்
மேய வேணித் திரு முடிமேல் விரும்பி ஆடி அருளுதற்குத்
தூய திருமஞ்சனம் ஐந்தும் அளிக்கும் உரிமைச் சுரபிகள் தாம் - 4.6.20

1231 - சீலமுடைய கோக்குலங்கள் சிறக்கும் தகைமைத் தேவருடன்
காலம் முழுதும் உலகனைத்தும் காக்கும் முதல் காரணர் ஆகும்
நீலகண்டர் செய்ய சடை நிருத்தர் சாத்து நீறுதரும்
மூலம் அவதாரம் செய்யும் மூர்த்தம் என்றால் முடிவு என்னோ - 4.6.21

1232 - உள்ளும் தகைமை இனிப் பிறவேறுளவே உழை மான் மறிக்கன்று
துள்ளும் கரத்தார் அணி பணியின் சுடர் சூழ் மணிகள் சுரநதி நீர்
தெள்ளும் சடையார் தேவர்கள் தம்பிராட்டி உடனே சேரமிசைக்
கொள்ளும் சின மால் விடைத் தேவர் குலம் அன்றோ? இச் சுரபி குலம் - 4.6.22

1233 - என்றின்னனவே பலவும் நினைந்து இதத்தின் வழியே மேய்த்து இந்தக்
கன்று பயில் ஆன் நிரை காக்கும் இதன் மேல் இல்லை கடன் இதுவே
மன்றுள் ஆடும் சேவடிகள் வழுத்து நெறியாவதும் என்று
நின்ற ஆயன் தனை நோக்கி நிரை மேய்ப்பு ஒழிக நீ என்பார் - 4.6.23

1234 - யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை மகனும்
தானேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேராயம் அளிப்பார் ஆகிப் பைங்கூழ்க்கு
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறைச் சிறுவர் - 4.6.24

1235 - கோலும் கயிறும் கொண்டு குழைக் குடுமி அலையக் குலவு மான்
தோலும் நூலும் சிறு மார்பில் துவள அரைக் கோவணம் சுடரப்
பாலும் பயனும் பெருக வரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால்
சாலும் புல்லின் அவை வேண்டுந் தனையும் மிசையும் தலைச் சென்று - 4.6.25

1236 - பதவு காலங்களில் மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவு அகற்றி
இதம் உண் துறையுள் நற்றண்ணீர் ஊட்டி அச்சம் எதிர் நீக்கி
அதர் நல்லன முன் செல நீழல் அமர் வித்து அமுத மதுரப்பால்
உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லம் தொறும் உய்த்தார் - 4.6.26

1237 - மண்ணிக் கரையின் வளர் புறவின் மாடும் படுகர் மருங்கினிலும்
தண்ணித்தில நீர் மருதத் தண்தலை சூழ் குலையின் சார்பினிலும்
எண்ணிற் பெருகு நிரை மேய்த்துச் சமிதை உடன் மேல் ஏரிகொண்டு
நண்ணில் கங்குல் முன் புகுந்தும் நன்னாள் பலவாம் அந் நாளில் - 4.6.27

1238 - ஆய நிரையின் குலம் எல்லாம் அழகின் விளங்கி மிகப் பல்கி
மேய இனிய புல் உணவும் விரும்பு புனலும் ஆர்தலினால்
ஏய மனங்கொள் பெரு மகிழ்ச்சி எய்தி இரவும் நண்பகலும்
தூய தீம்பால் மடி பெருகிச் சொரிய முலைகள் சொரிந்தனவால் - 4.6.28

1239 - பூணும் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஓம தேனுக்கள்
காணும் பொலிவின் முன்னையினும் அனேக மடங்கு கறப்பனவாய்
பேணுந் தகுதி அன்பால் இப் பிரம சாரி மேய்த்த அதற்பின்
மாணுந் திறத்தவான என மறையோர் எல்லாம் மனம் மகிழ்ந்தார் - 4.6.29

1240 - அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி
மனைக் கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ் சிறிய மறைக் கன்று
தனைக் கண்டு அருகு சார்ந்து உருகித் தாயாந் தன்மை நிலைமையவாய்க்
கணைத்துச் சுரந்து முலைக் கண்கள் கறவாமே பால் பொழிந்தனவால் - 4.6.30

1241 - தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழியக் கண்டு வந்து
செம்மை நெறியே உறுமனத்தில் திரு மஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே
எம்மையுடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில்
மெய்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும் - 4.6.31

1242 - அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணி மணற் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவ ஆலயமும்
துங்க நீடு கோபுரமும் சுற்றாலயமும் வகுத்து அமைத்தார் - 4.6.32

1243 - ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு வளர் புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து புனிதர் சடிலத் திரு முடிமேல்
சாத்தல் ஆகும் திருப் பள்ளித் தாமம் பலவும் தாம் கொய்து
கோத்த இலைப் பூங்கூடையினில் கொணர்ந்து மணம் தங்கிட வைத்தார் - 4.6.33

1244 - நல்ல நவ கும்பங்கள் பெற நாடிக் கொண்டு நாணல் பூங்
கொல்லை இடத்தும் குறை மறைவும் மேவுங் கோக்கள் உடன் கூட
ஒல்லை அணைந்து பாலாக்கள் ஒன்றுக்கு ஒரு காலாக எதிர்
செல்ல அவையும் கனைத்து முலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால் - 4.6.34

1245 - கொண்ட மடுத்த குட நிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து
வண்டு மருவுந் திருப் பள்ளித் தாமம் கொண்டு வரன் முறையே
பண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திரு மஞ்சனம் ஆட்டி - 4.6.35

1246 - மீள மீள இவ்வண்ணம் வெண் பால் சொரி மஞ்சனம் ஆட்ட ஆள் உடையார்
தம்முடைய அன்பர் அன்பின்பால் உளதாய் மூள அமர்ந்த
நயப் பாடு முதிர்ந்த பற்று முற்றச் சூழ்
கோளம் அதனில் உள் நிறைந்து குறித்த பூசை கொள்கின்றார் - 4.6.36

1247 - பெருமை பிறங்கும் சேய்ஞலூர் பிள்ளையார் தம் உள்ளத்தில்
ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான
திரு மஞ்சனமே முதல் அவற்றில் தேடாதன அன்பினில் நிரம்பி
வரும் அந் நெறியே அர்ச்சனை செய்து அருளி வணங்கி மகிழ்கின்றார் - 4.6.37

1248 - இறையோன் அடிக் கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ்சனம் ஆட்டும்
நிறை பூசனைக்குக் குடங்கள் பால் நிரம்பச் சொரிந்து நிரைக் குலங்கள்
குறைபாடு இன்றி மடி பெருகக் குவிந்த முலைப்பால் குறைவு இன்றி
மறையோர் மனையின் முன்பு தரும் வளங்கள் பொலிய வைகுமால் - 4.6.38

1249 - செயல் இப்படியே பல நாளும் சிறந்த பூசை செய்வதற்கு
முயல்வுற்று அதுவே திருவிளையாட்டாக முந்நூல் அணிமார்பர்
இயல்பில் புரியும் மற்று இதனைக் கண்டித் திறத்தை அறியாத
அயல் மற்று ஒருவன் அப் பதியில் அந்தணாளர்க்கு அறிவித்தான் - 4.6.39

1250 - அச் சொல் கேட்ட அருமறையோர் ஆயன் அறியான் என்று அவற்றின்
இச்சை வழியே யான் மேய்ப்பேன் என்று எம் பசுக்கள் தமைக் கறந்து
பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங்கு உரைக்க அவன் தாதை
எச்ச தத்தன் தனை அழைமின் என்றார் அவையில் இருந்தார்கள் - 4.6.40

1251 - ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ் அந்தணன் தன் திருமனையின்
பாங்கு சென்று மற்றவனை அழைத்துக் கொண்டு வரப் பரந்த
ஓங்கு சபையோர் அவனைப் பார்த்து ஊர் ஆனிரை மேய்த்து உன் மகன் செய்
தீங்கு தன்னைக் கேள் என்று புகுந்த பரிசு செப்புவார் - 4.6.41

1252 - அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களான எலாம்
சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்பான் போல்
கந்தம் மலிபூம் புனல் மண்ணி மணலில் கறந்து பால் உகுத்து
வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய் மொழிந்தார் - 4.6.42

1253 - மறையோர் மொழியக் கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இது
இறையும் நான் முன் பறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள்
எனக் குறை கொண்டு இறைஞ்சி இனிப் புகுதில் குற்றம் எனதேயாம் என்றான் - 4.6.43

1254 - அந்தணாளர் தமை விடை கொண்டு அந்தி தொழுது மனை புகுந்து
வந்த பழி ஒன்று என நினைந்தே மகனார் தமக்கு வாய் நேரான்
இந்த நிலைமை அறிவேன் என்று இரவு கழிந்து நிரை மேய்க்க
மைந்தனார் தாம் போயின பின் மறைந்து சென்றான் மறை முதியோன் - 4.6.44

1255 - சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர் ஆன் நிரை கொடு போய்
மன்றல் மருவும் புறவின் கண் மேய்ப்பார் மண்ணி மணற் குறையில்
அன்று திரளக் கொடு சென்ற அதனை அறிந்து மறைந்தப் பால்
நின்ற குரவின் மிசை ஏறி நிகழ்வது அறிய ஒளித்து இருந்தான் - 4.6.45

1256 - அன்பு புரியும் பிரம சாரிகளும் மூழ்கி அரனார்க்கு
முன்பு போல மணல் கோயில் ஆக்கி முகை மென் மலர் கொய்து
பின்பு வரும் ஆன் முலை பொழிபால் பெருகும் குடங்கள் பேணும் இடம்
தன்பால் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டுவன சமைத்தார் - 4.6.46

1257 - நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும் பூசனை தொடங்கி
ஒன்றும் உள்ளத்து உண்மையினால் உடைய நாதன் திரு முடிமேல்
மன்றல் விரவும் திருப் பள்ளித் தாமம் சாத்தி மஞ்சனமா
நன்று நிறை தீம் பால் குடங்கள் எடுத்து நயப்பு உற்று ஆட்டுதலும் - 4.6.47

1258 - பரவ மேல் மேல் எழும் பரிவும் பழைய பான்மை மிகும் பண்பும்
விரவ மேதக்கவர் பால் மேவும் பெருமை வெளிப் படுப்பான்
அரவம் மேவும் சடைமுடியார் அருளாம் என்ன அறிவு அழிந்து
குரவ மேவு முது மறையோன் கோப மேவும் படி கண்டான் - 4.6.48

1259 - கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கைத் தண்டு
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்துக் கொடிதாம் மொழி கூறத்
தொண்டு புரியும் சிறிய பெரும் தொன்றலார் தம் பெருமான் மேல்
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலரால் - 4.6.49

1260 - மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோ ன் அடிக்க வேறு உணரார்
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு
மாலா மறையோன் மிகச் செயிர்த்து வைத்த திருமஞ்சனக் குடப்பால்
காலால் இடறிச் சிந்தினான் கையால் கடமைத் தலை நின்றான் - 4.6.50

1261 - சிந்தும் பொழுதில் அது நோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத்
தந்தை எனவே அறிந்தவன் தன் தாள்கள் சிந்தும் தகுதியினால்
முந்தை மருங்கு கிடந்த கோல் எடுத்தார்க்கு அதுவே முறைமை யினால்
வந்து மழுவாயிட எறிந்தார் மண் மேல் வீழ்ந்தான் மறையோனும் - 4.6.51

1262 - எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக
மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்திடப்புகலும்
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி - 4.6.52

1263 - பூத கணங்கள் புடை சூழப் புராண முனிவர் புத்தேளிர்
வேத மொழிகள் எடுத்து ஏத்த விமல மூர்த்தி திரு உள்ளம்
காதல் கூர வெளிப் படலும் கண்டு தொழுது மனம் களித்துப்
பாத மலர்கள் மேல் விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார் - 4.6.53

1264 - தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள் செய்து அணைத்து அருளி
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள - 4.6.54

1265 - செங்கண் விடையார் திரு மலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின் மேல் அளவின்று உயர்ந்த சிவமயமாய்
பொங்கி எழுந்த திரு அருளின் மூழ்கிப் பூ மேல் அயன் முதலாம்
துங்க அமரர் துதி செய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார் - 4.6.55

1266 - அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்து நாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார் - 4.6.56

1267 - எல்லா உலகும் ஆர்ப்பு எடுப்ப எங்கும் மலர் மாரிகள் பொழியப்
பல்லாயிரவர் கண நாதர் படி ஆடிக் களி பயிலச்
சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல்லியங்கள் எழச் சைவ
நல்லாறு ஓங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுது அணைந்தார் - 4.6.57

1268 - ஞாலம் அறியப் பிழை புரிந்து நம்பர் அருளால் நால் மறையின்
சீலம் திகழும் சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் திருக்கையில்
கோல மழுவால் ஏறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றம் உடன்
மூல முதல்வர் சிவ லோகம் எய்தப் பெற்றான் முது மறையோன் - 4.6.58

1269 - வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த மறைச் சிறுவர்
அந்த உடம்பு தன் உடனே அரனார் மகனார் ஆயினார்
இந்த நிலைமை அறிந்தாரார்? ஈறிலாதார் தமக்கு அன்பு
தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றும் கால் - 4.6.59


1270 -சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணி கண்டத்து
ஈசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழ எடுத்துத்
தேசம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பணித்த திருவாளன்
வாச மலர் மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் - 4.6.60

சருக்கம் 4-க்குத் திருவிருத்தம் - 1270
திருச்சிற்றம்பலம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் முற்றிற்று.



திருச்சிற்றம்பலம்

5. திருநின்ற சருக்கம்


5.1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் -(1271 - 1699) -மின்பதிப்பு
- 5.2 குலச்சிறை நாயனார் புராணம் - (1700-1710) -மின்பதிப்பு
- 5.3பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் - (1711 -1721) -மின்பதிப்பு
- 5.4 காரைக்கால் அம்மையார் புராணம் - (1722-1787 ) -மின்பதிப்பு
- 5.5 அப்பூதி அடிகள் நாயனார் புராணம் - (1788-1832) -மின்பதிப்பு
- 5.6 திரு நீல நக்க நாயனார் புராணம் - (1833 -1870) -மின்பதிப்பு
- 5.7 நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் - (1871 -1902 ) -மின்பதிப்பு

5.1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் (1271 - 1699)

திருச்சிற்றம்பலம்



1271 - திரு நாவுக்கு அரசர் வளர் திருத் தொண்டின் நெறி வாழ
வரு ஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ்
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன் பேர் உலகில்
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் - 5.1.1

1272 - தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றித் துகள் இல்லா
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கிச்
சென்னி மதி புனையவளர் மணி மாடச் செழும் பதிகள்
மன்னி நிறைந்து உளது திரு முனைப்பாடி வளநாடு - 5.1.2

1273 - புனப் பண்ணை மணியினோடும் புறவின் நறும் புதுமலரின்
கனப்பெண்ணில் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டேர்
இனப் பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும்
வனப்பெண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும் - 5.1.3

1274 - காலெல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன்
பாலெல்லாம் கதிர்ச் சாலி பரப்பு எல்லாம் குலைக் கமுகு
சாலெல்லாம் தரள நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்
மேலெல்லா ம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை - 5.1.4

1275 - கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்
புடை பரந்து ஞிமிறொலிப்பப் புதுப் புனல் போல் மடை உடைப்ப
உடை மடையக் கரும்படு கட்டியின் அடைப்ப ஊர்கள் தொறும் - 5.1.5

1276 - கரும் கதலிப் பெருங்குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட
மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப்
பெருஞ்சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பொலி பிறங்க
நெருங்கிய சாதுரங்க பல நிகர்பனவாம் நிறை மருதம் - 5.1.6

1277 - நறையாற்றுங் கமுகு நவ மணிக் கழுத்தின் உடன் கூந்தல்
பொறை ஆற்றா மகளிர் எனப் புறம்பு அலை தண்டலை வேலித்
துறை ஆற்ற மணி வண்ணச் சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை
நிறை ஆற்று நீர்க் கொழுந்து படர்ந்தேறும் நிலைமையதால் - 5.1.7

1278 - மரு மேவு மலர் மேய மா கடலினுட் படியும்
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்
வரு மேனிச் செங்கண் வரால் மட முட்டப் பால் சொரியும்
கரு மேதி தனைக் கொண்டு கரை புரள்வ திரை வாவி - 5.1.8

1279 - மொய்யளி சூழ் நிரைநீல முழு வலயங்களின் அலையச்
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப
மெய்யொளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை
வைய மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர்ச் சோலை - 5.1.9

1280 - எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்
பயிர்க் கண்வியல் இடங்கள் பல பரந்து உயர் நெற் கூடுகளும்
வெயில் கதிர்மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி
மயில் குலமும் முகல் குலமும் மாறாட மருங்கு ஆடும் - 5.1.10

1281 - மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி
அறம் தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும்
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில்
சிறந்த திருமுனைப் பாடித் திறம் பாடும் சீர்ப் பாடு - 5.1.11

1282 - இவ் வகைய திரு நாட்டில் எனைப் பல ஊர்களும் என்றும்
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள்
சைவ நெறி ஏழ் உலகும் பாலிக்கும் தன்மையினால்
தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர் - 5.1.12

1283 - ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணிக் காஞ்சி
ஓங்குவன மாட நிரை ஒழுகுவன வழுவில் அறம்
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள் - 5.1.13

1284 - மலர் நீலம் வயல் காட்டும் மைஞ் ஞீலம் மதி காட்டும்
அலர் நீடு மறு காட்டும் அணி ஊசல் பல காட்டும்
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும்
கல நீடு மனை காட்டும் கரை காட்டாப் பெருவளங்கள் - 5.1.14

1285 - தலத்தின் கண் விளங்கிய அத் தனிப் பதியில் அனைத்து வித
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண்
விலங்கின் மனை ஒழுக்கத்தின் மேதக்க ந்஢லைவேளாண்
குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் - 5.1.15

1286 - அக் குடியின் மேல் தோன்றலாய பெரும் தன்மையினார்
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார்
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார் - 5.1.16

1287 -புகழனார் தமக்கு உரிமைப் பொருவில் குலக்குடியின் கண்
மகிழவரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
நிகழும் மலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில்
திகழ வருந் திரு அனைய திலகவதியார் பிறந்தார் - 5.1.17

1288 -திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்
அலகில் கலைத் துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறிவாழ
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார் - 5.1.18

1289 -மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர்ப் புகனார்
காதலனார் உதித்த தற்பின் கடன் முறைமை மங்கலங்கள்
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்
ஏதமில் பல் கிளை போற்ற இளங் குழவிப் பதம் கடந்தார் - 5.1.19

1290 -மருள் நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மணவினையும்
தெருண் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்பச் செய்து அதற்பின்
பொருள் நீத்தம் கொள வீசிப் புலன் கொளுவ மன முகிழ்த்த
சுருள் நீக்கி மலர் விக்கும் கலை பயிலத் தொடங்கு வித்தார் - 5.1.20

1291 - தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால்
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர் கின்றார் - 5.1.21

1292 - அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர்
மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்
பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார் - 5.1.22

1293 - ஆண் தகைமைத் தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார்
காண் தகைய பெருவனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்
பூண்ட கொடைப் புகழனார் பால் பொருவின் மகள் கொள்ள
வேண்டி எழுங் காதலினால் மேலோரைச் செலவிட்டார் - 5.1.23

1294 - அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்
குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார் - 5.1.24

1295 - கன்னித் திருத் தாதையார் மணம் இசைவு கலிப்பகையார்
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை வினை முடிப்பதன் முன்
மன்னவற்கு வடபுலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர்மேல்
அன்னவர்க்கு விடை கொடுத்தான் அவ்வினை மேல் அவர் அகன்றார் - 5.1.25

1296 - வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெஞ்சமத்தில் விடை கொண்டு
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில்
காய்ந்த சினப் பகைப் புலத்தைக் கலந்து கடும் சமர்க் கடலை
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர்த் துறை விளைத்தார் - 5.1.26

1297 - ஆய நாள் இடை இப்பால் அணங்கு அனையாள் தனைப் பயந்த
தூயகுலப் புகழனார் தொன்று தொடு நிலையாமை
மேய வினைப் பயத்தாலே இவ் உலகை விட்டு அகலத்
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார் - 5.1.27

1298 - மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப்
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார் - 5.1.28

1299 - தாதையாரும் பயந்த தாயாரும் இறந்த அதன் பின்
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த
காதலனார் மருண் நீக்கியாரும் மனக் கவலையினால்
பேது உறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார் - 5.1.29

1300 - ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்றத் துயர் ஒழிந்து
பெரு வானம் அடைந்தவர்க்குச் செய் கடன்கள் பெருக்கினார்
மருவார்மேல் மன்னவற்காய் மலையப் போம் கலிப்பகையார்
பொருவாரும் போர்க் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார் - 5.1.30

1301 - வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவப் போய்
அம் முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்குத்
தம் உடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்றச்
செம்மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார் - 5.1.31

1302 - எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனக் கொடுக்க இசைந்தார்கள்
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் எனத் துணிய
வந்தவர் தம் அடி இணை மேல் மருண் நீக்கியார் விழுந்தார் - 5.1.32

1303 - அந் நிலையில் மிகப் புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்கப் பெறுதலின் உயிர் தரித்தேன்
என்னை இனித் தனிக் கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார் - 5.1.33

1304 - தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி
இம்பர் மனைத் தவம் புரிந்து திலகவதியார் இருந்தார் - 5.1.34

1305 - மாசின் மனத் துயர் ஒழிய மருண் நீக்கியார் நிரம்பித்
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வார் ஆய்க்
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்துக் கருணையினால்
ஆசில் அறச் சாலைகளும் தண்ணீர்ப் பந்தரும் அமைப்பார் - 5.1.35

1306 - கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்
யாவர்க்கும் தவிராத ஈகை வினைத் துறை நின்றார் - 5.1.36

1307 - நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்களான வற்றின்
நல்ல்லாறு தெரிந்துணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார் - 5.1.37

1308 - பாடலி புத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கு அணைந்து மற்றவர்க்கு
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்
கூடவரும் உணர்வு கொளக் குறி பலவும் கொளுவினார் - 5.1.38

1309 -அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்
பொங்கும் உணர்வுறப் பயின்றே அந் நெறியில் புலன் சிறப்பத்
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்குத்
தங்களில்ன் மேலாம் தரும சேனர் எனும் பெயர் கொடுத்தார் - 5.1.39

1310 -அத்துறையின் மீக் கூரும் அமைதியினால் அகல் இடத்தில்
சித்த நிலை அறியாதாரையும் வாதின் கண்
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய
வித்தகராய் அமண் சமயத் தலைமையினில் மேம் பட்டார் - 5.1.40

1311 -அந் நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவச்
செந்நெறியின் வைகும் திலகவதியார் தாமும்
தொன்னெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூய சிவ
நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் - 5.1.41

1312 -பேராத பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன் பால்
ஆராத அன்பு பெற ஆதரித்த அம் மடவார்
நீரார் கெடில வட நீள் கரையில் நீடு பெரும்
சீரார் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார் - 5.1.42

1313 -சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவளக்
குன்றை அடி பணிந்து கோதில் சிவ சின்னம்
அன்று முதல் தாங்கி ஆர்வம் உறத் தம் கையால்
துன்று திருப் பணிகள் செய்யத் தொடங்கினார் - 5.1.43

1314 -புலர்வதன் முன் திருவலகு பணி மாறிப் புனி அகன்ற
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்துப்
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார் - 5.1.44

1315 - நாளும் மிகும் பணி செய்து குறைந்து அடையும் நன்னாளில்
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்
கோளுறு தீவினை முந்தப் பர சமயம் குறித்து அதற்கு
மூளும் மனக் கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து - 5.1.45

1316 - தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியைத் தொழுது என்னை
ஆண்டு அருளும் நீராகில் அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினைப் பர சமயக் குழி நின்றும் எடுத்து ஆள
வேண்டும் எனப் பல முறையும் விண்ணப்பம் செய்தனரால் - 5.1.46

1317 - தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் எனச்
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவப்
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார் - 5.1.47

1318 - மன்னு தபோ தனியார்க்குக் கனவின் கண் மழ விடையார்
உன்னுடைய மனக் கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்
முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்
அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வான் என அருளி - 5.1.48

1319 - பண்டு புரி நல் தவத்துப் பழுதின் அளவில் இறை வழுவும்
தொண்டரை ஆளத் தொடங்கும் சூலை வேதனை தன்னைக்
கண் தரு நெற்றியர் அருளக் கடும் கனல் போல் அடும் கொடிய
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றின் இடைப் புக்கதால் - 5.1.49

1320 - அடைவில் அமண் புரி தரும சேனர் வயிற்று அடையும் அது
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்
கொடிய எலாம் ஒன்றாகும் எனக் குடரின் அகம் குடையப்
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறை இடை விழுந்தார் - 5.1.50

1321 - அச் சமயத்து இடைத் தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேல் மேலும் மிக முடுகி
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர் தாம்
நச்சரவின் விடம் தலைக் கொண்டு என மயங்கி நவையுற்றார் - 5.1.51

1322 - அவர் நிலைமை கண்ட அதற்பின் அமண் கையர் பலர் ஈண்டிக்
கவர் கின்ற விடம் போல் முன் கண்டு அறியாக் கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினைப் பெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார் - 5.1.52

1323 - புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
குண்டிகை நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை
கண்டு மிகப் பீலி கொடு கால் அளவும் தடவி இடவும்
பண்டையினும் நோவு மிகப் பரிபவத்தால் இடர் உழந்தார் - 5.1.53

1324 - தாவாத புகழ்த் தரும சேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்று இடலும் ஒழியாமை உணர்ந்தாராய்
ஆ! ஆ! நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்ப்
போவார்கள் இது நம்மால் போக்க அரிதாம் எனப் புகன்று - 5.1.54

1325 - குண்டர்களும் கை விட்டார் கொடும் சூலை மிசைக் கொண்டு
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதி மயங்கிப்
பண்டை உறவு உணர்ந்தார்க்குத் திலகவதியார் உளராகக்
கொண்டு அவர்பால் ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த - 5.1.55

1326 - ஆங்கு அவன் போய்த் திருவதிகை தணை அடைய அரும் தவத்தார்
பூங்கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணையக் கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது எனத்
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான் - 5.1.56

1327 - கொல்லாது சூலை நோய் குடர் முடக்கித் தீராமை
எல்லாரும் கை விட்டார் இது செயல் என் முன் பிறந்த
நல்லாள் பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான் - 5.1.57

1328 - என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம்
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய
அன்று அவனும் மீண்டு போய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான் - 5.1.58

1329 - அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இப் புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்
செவ்வாறு சேர் திலக வதியார் தாள் சேர்வன் என - 5.1.59

1330 - எடுத்த மனக் கருத்து உய்ய எழுதலால் எழு முயற்சி
அடுத்தலுமே அயர்வு ஒதுங்கத் திருவதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழியத்
தொடுத்த பீலியும் ஒழியப் போவதற்குத் துணிந்து எழுந்தார் - 5.1.60

1331 - பொய் தரும் மால் உள்ளத்துப் புன் சமணர் இடம் கழிந்து
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து
கை தருவார் தமை ஊன்றிக் காணாமே இரவின் கண்
செய் தவ மாதவர் வாழும் திருவதிகை சென்று அடைவார் - 5.1.61

1332 - சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடரக்
குலவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணையக் குலவரை போன்று
இலகு மணி மதில் சோதி எதிர் கொள் திருவதிகையினில்
திலக வதியார் இருந்த திரு மடத்தைச் சென்று அணைந்தார் - 5.1.62

1333 - வந்து அணைந்து திலகவதியார் அடிமேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர்
இந்த உடல் கொடும் சூலைக் கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறுநெறி உரைத்து அருளும் என உரைத்து - 5.1.63

1334 - தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது
கோளில் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது
மூளும் அரும் துயர் உழந்தீர்! எழுந்தீர்! என மொழிந்தார் - 5.1.64

1335 - மற்ற வுரை கேட்டலும் ஏ மருண் நீக்கியார் தாமும்
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர்
பற்று அறுப்பார் தமைப் பணிந்து பணி செய்வீர் எனப் பணித்தார் - 5.1.65

1336 - என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்றுக் கொண்டு இறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து
சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக் கயிலைக்
குன்று உடையார் திரு நீற்றை அஞ்சு எழுத்து ஓதிக் கொடுத்தார் - 5.1.66

1337 - திரு வாளன் திரு நீறு திலகவதியார் அளிப்ப
பெரு வாழ்வு வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து ஏற்ற அங்கு
உருவார அணிந்து தமக்குற்ற இடத்து உய்யும் நெறி
தருவாராய்த் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார் - 5.1.67

1338 - நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும்
மாற வரும் திருப் பள்ளி எழுச்சியினில் மாதவம் செய்
சீர் அடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரைக் கொடு புக்கார் - 5.1.68

1339 - திரைக் கெடில வீரட்டானத்து இருந்த செங்கனக
வரைச் சிலையார் பெரும் கோயில் தொழுது வலம் கொண்டு இறைஞ்சித்
தரைத் தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திரு அருளால்
உரைத் தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார் - 5.1.69

1340 - நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன்
நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும்
பிணி மாயை அறுத்திடுவான்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என
நீடிய கோதில் திருப்பதிகம்
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்
போமாறு எதிர் நின்று புகன்றனரால் - 5.1.70

1341 - மன்னும் பதிகம் அது பாடியபின்
வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான்
அந் நின்ற நிலைக் கண் அகன்றிடலும்
அடியேன் உயிரோடு அருள் தந்தது எனாச்
செந் நின்ற பரம் பொருள் ஆனவர் தம்
திருவாரருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால்
முதல்வன் கருணைக் கடல் மூழ்கினாரே - 5.1.71

1342 - அங்கங்கள் அடங்க உரோமம்
எலாம் அடையப் புளகம் கண் முகிழ்த்து அலரப்
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து
இழியப் புவி மீது விழுந்து புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு
அதனால் ஏறாத பெருந்திடர் ஏறிட நின்
தங்கும் கருணைப் பெரு வெள்ளம்
இடத் தகுமோ என இன்னன தாம் மொழிவார் - 5.1.72

1343 - பொய் வாய்மை பெருக்கிய
புன் சமயப் பொறியில் சமண் நீசர் புறத் துறையாம்
அவ்வாழ் குழியின் கண் விழுந்து
எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
இவ் வாழ்வு பெறத் தரு சூலையினுக்கு
எதிர்செய் குறை என் கொல் எனத் தொழுவார் - 5.1.73

1344 - மேவுற்ற இவ் வேலையில்
நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வளப்
பதிகத் தொடைபாடிய பான்மையினால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும்
நின் நன்நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான்
இடையே ஒருவாய்மை எழுந்ததுவே - 5.1.74

1345 - இத் தன்மை நிகழ்ந்துழி
நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள்
சித்தம் திகழ் தீவினையேன் அடையும்
திருவோ இது என்று தெருண்டு அறியா
அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு
அருளும் கருணைத் திறமான அதன்
மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே
மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே - 5.1.75

1346 - பரசும் கருணைப் பெரியோன்
அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு
உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ்
முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால்
நெடு மா கடல் என்ன நிறைந்துளதே - 5.1.76

1347 - மையல் துறை ஏறி மகிழ்ந்து
அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய்
விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும்
ஈறு இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் உழவாரமுடன் கைக்
கொண்டு கலந்து கசிந்தனரே - 5.1.77

1348 - மெய்ம்மைப் பணி செய்த
விருப்பு அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில்
தம் இச்சை நிரம்ப வரம் பெறும்
அத் தன்மைப் பதி மேவியதா பதியார்
பொய்மைச் சமயப் பிணி விட்டவர்
முன் போதும் பிணி விட்டருளிப் பொருளா
எம்மைப் பணிகொள் கருணைத் திறம்
இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே - 5.1.78

1349 - இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கைய வண்ணம்
பன்னு தொன்மையில் பாடலி புத்திர நகரில்
புன்மை யே புரி அமணர் தாம் கேட்டு அது பொறாராய் - 5.1.79

1350 - தரும சேனர்க்கு வந்த அத் தடுப்ப அரும் சூலை
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்யப் போய்ப்
பெருகு சைவராய்ப் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார் - 5.1.80

1351 - மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால்
நிலையும் பெற்ற இந்நெறி இனி அழிந்தது என்று அழுங்கிக்
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர்
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார் - 5.1.81

1352 - இவ்வகைப் பல அமணர்கள் துயருன் ஈண்டி
மெய் வகைத் திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு
சைவனாகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் - 5.1.82

1353 - தவ்வை கைவத்து நிற்றலின் தரும சேனரும் தாம்
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்திலது எனப் போய் இங்கு
எவ்வ மாக அங்கு எய்தி நம் சமய அங்கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர் எனச் சொலத் தெளிந்தார் - 5.1.83

1354 - சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர்
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார் - 5.1.84

1355 - உடை ஒழிந்து ஒரு பேச்சு இடை இன்றி நின்று உண்போர்
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார் - 5.1.85

1356 - அடிகண்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் எனக் கூற
வடி நெடுவேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என் கொல் எனக் கவன்று உரைத்தான் - 5.1.86

1357 - கடை காவல் உடையார்கள் புகுத விடக் காவலன் பால்
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணித் தாம் எண்ணியவாறு
உடையார் ஆகிய தரும சேனர் பிணி உற்றாராய்ச்
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார் - 5.1.87

1358 - விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து
புரை உடைய மனத்தினராய் போவதற்குப் பொய்ப் பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழியப் பெறுவதே
கரையில் தவத்தீர் இதனுக்கு என் செய்வது எனக் கனன்றான் - 5.1.88

1359 - தலை நெறி ஆகிய சமயம் தன்னை அழித்து உன்னுடைய
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறி இலியை
அலை புரிவாய் எனப் பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர் - 5.1.89

1360 - அருள் கொண்ட உணர்வு இன்றி நெறிகோடி அறிவென்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள் தமை நோக்கித்
தெருள் கொண்டோ ர் இவர் சொன்ன தீயோனைச் செறுவதற்குப்
பொருள் கொண்டு விடாது என் பால் கொடுவாரும் எனப் புகன்றான் - 5.1.90

1361 - அரசனது பணிதலை நின்ற அமைச்சர்களும் அந்நிலையே
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை தனை மேவி
பரசமயப் பற்று அறுத்த பான்மையினார் பால் சென்றார் - 5.1.91

1362 - சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார் - 5.1.92

1363 - நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்மறையின்
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடை யானைத்
தேமாலைச் செந்தமிழின் செழும் திருத் தாண்டகம் பாடி
ஆமாறு நீர் அழைக்கும் அடைவிலம் என்று அருள் செய்தார் - 5.1.93

1364 - ஆண்ட அரசருள் செய்யக் கேட்ட வரும் அடி வணங்கி
வேண்டியவர்க் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சினப் போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார் - 5.1.94

1365 - பல்லவனும் அது கேட்டுப் பாங்கு இருந்த பாய் உடுக்கை
வல் அமணர் தமை நோக்கி மற்று அவனைச் செய்வது இனிச்
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இடப் புகன்றார் - 5.1.95

1366 - அருகு அணைந்தார் தமை நோக்கி அவ் வண்ணம் செய்க எனப்
பெருகு சினக் கொடுங் கோலான் மொழிந்திடலும் பெருந் தகையை
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தித்
திருகு கரும் தாள் கொளுவிச் சேமங்கள் செய்து அமைத்தார் - 5.1.96

1367 - ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்துத்
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலைத் தலைக் கொண்டே
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று
மூண்டமனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார் - 5.1.97

1368 - வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம்
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர்த் தடம் போன்று
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே - 5.1.98

1369 - மாசு இல் மதி நீடுபுனல் மன்னி வளர் சென்னியனைப்
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை
ஈசனை எம்பெருமானை எவ் உயிரும் தருவானை
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார் - 5.1.99

1370 - ஓர் எழுநாள் கழிந்து அதன்பின் உணர்வில் அமணரை அழைத்துப்
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும்
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர்
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையைத் திறந்தார்கள் - 5.1.100

1371 - ஆனந்த வெள்ளத்தின் இடை மூழ்கி அம்பலவர்
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார் தமைக் கண்டே
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார் - 5.1.101

1372 - அதிசயம் அன்றிது முன்னை அமண் சமயச் சாதகத்தால்
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து
மதி செய்வது இனிக் கொடிய வல் விடம் ஊட்டுவது என்று
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள் - 5.1.102

1373 - ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன்
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்பத்
தேங்காதார் திருநாவுக்கரையரை அத் தீய விடப்
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செயப் பண்ணினார் - 5.1.103

1374 - நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே
செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்
வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார் - 5.1.104

1375 - பொடி ஆர்க்கும் திருமேனிப் புனிதர்க்குப் புவனம்கள்
முடிவாக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுதானால்
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம் உடைய
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ - 5.1.105

1376 - அவ் விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெருக் கொண்டே
இவ் விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி எனத்
தெவ் விடத்துச் செயல் புரியும் காவலற்குச் செப்புவார் - 5.1.106

1377 - நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர்
தஞ்சமுடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான்
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும்
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார் - 5.1.107

1378 - மற்றவர் தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும்
செற்ற அவனை இனிக் கடியும் திறம் எவ்வாறு எனச் செப்ப
உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின்
கொற்ற வயக் களிற்று எதிரே விடுவது எனக் கூறினார் - 5.1.108

1379 - மா பாவிக் கடை அமணர் வாகீசத் திருவடியாம்
கா பாலி அடியவர் பால் கடக் களிற்றை விடுக என்னப்
பூ பாலர் செயல் மேற்கொள் புலைத் தொழிலோன் அவர் தம் மேல்
கோ பாதி சயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான் - 5.1.109

1380 - கூடத்தைக் குத்தி ஒரு குன்றம் எனப் புறப்பட்டு
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றித்
தாடத்தில் பரிக்காரர் தலை இடறிக் கடக் களிற்றின்
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம் - 5.1.110

1377 - பாசத் தொடை நிகளத் தொடர்பறியத் தறி முறியா
மீ சுற்றிய பறவைக் குலம் வெருவத் துணிவிலகா
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறிப் பரி உழறா
வாசக் கட மழை முற்பட மதவெற்பு எதிர் வருமால் - 5.1.111

1378 - . இடி உற்று எழும் ஒலியில் திசை இப உட்கிட அடியில்
படி புக்கு உற நெளியப் படர் பவனக் கதி விசையில்
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்
முடிவில் கனல் என முன் சினம் முடுகிக் கடுகியதே - 5.1.112

1379 - மாடு உற்று அணை இவுளிக் குலம் மறியச் செறி வயிரக்
கோடுற்று இரு பிளவிட்டு அறு குறை கைக்கொடு முறியச்
சாடுற்றிடு மதில் தெற்றிகள் சரியப் புடை அணி செற்று
ஆடுற்று அகல் வெளியுற்று அது அவ்வடர் கைக்குல வரையே - 5.1.113

1380 - பாவக் கொடு வினை முற்றிய படிறுற்று அடு கொடியோர்
நாவுக்கரசர் எதிர் முற்கொடு நணுகிக் கருவரை போல்
ஏவிச் செறு பொருகைக் கரியினை உய்த்திட வெருளார்
சேவிற்று திகழ்பவர் பொன் கழல் தெளிவு உற்றனர் பெரியோர் - 5.1.114

1381 - அண்ணல் அருந் தவ வேந்தர் ஆணை தம் மேல் வரக் கண்டு
விண்ணவர் தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானைச்
சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப் பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார் - 5.1.115

1382 - வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்
வெம்ஞ்சுடர் மூவிலைச் சுல வீரட்டர் தம் அடியோம் நாம்
அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார் - 5.1.116

1383 - தண் தமிழ் மாலைகள் பாடித் தம் பெருமான் சரணாகக்
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கைத்
தொண்டரை முன் வலமாகச் சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம் - 5.1.117

1384 - ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அவ் வேழம் பெயரத்
தூண்டிய மேல் மறப் பாகர் தொடக்கி அடத்துத் திரிந்து
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே - 5.1.118

1385 - ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்துப் பிளந்து
நாடிப் பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல
ஆடி அவ் யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே - 5.1.119

1386 - யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகித்
தானை நில மன்னன் தாளில் தனித் தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனிச் செய்வது என் என்றான் - 5.1.120

1387 - நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ் வண்ணம் நின் சீர்
பங்கப் படுத்தவன் போகப் பரிபவம் தீரும் உனக்குப்
பொங்கழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார் - 5.1.121

1388 - அல்லிருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான்
தொல்லைச் சமயம் அழித்துத் துயரம் விளைவித்தவன் தன்னைச்
சொல்லும் இனிச் செய்வது என்னச் சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்துக் கடல் இடைப் பாய்ச்சுவது என்றார் - 5.1.122

1389 - ஆங்கு அது கேட்ட அரசன் அவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் தன்னைச் சேமம் உறக் கொடு போகிப்
பாங்கு ஒரு கல்லில் அணைத்துப் பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்துமின் என்று விடுத்தான் - 5.1.123

1390 - அவ் வினை செய்திடப் போகும் அவருடன் போயர் உகந்த
வெவ்வினை யாளரும் சென்று மேவிட நாவுக்கரசர்
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்பாதகர் - 5.1.124

1391 - அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்
ஒப்பரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய்த்தொண்டர் தாமும்
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்தும் துதிப்பார் - 5.1.125

1392 - சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி
நல் தமிழ் மாலை ஆம் நமச்சிவாய என்று
அற்ற முன் காக்கும் அஞ்சு எழுத்தை அன்பொடு
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார் - 5.1.126

1393 - பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்சு எழுத்தையும் அரசு போற்றிடக்
கரு நெடுங்கடலின் உட் கல் மிதந்ததே - 5.1.127

1394 - அப் பெருங்கல்லும் அங்கு அரசு மேல் கொளத்
தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும்
தப்பியது அதன் மிசை இருந்த தாவில் சீர்
மெய்ப் பெரும் தொண்டனார் விளங்கித் தோன்றினார் - 5.1.128

1395 - இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்
ஒரு கல் மேல் ஏற்று இடல் உரைக்க வேண்டுமோ - 5.1.129

1396 - அருள் நயந்து அஞ்செழுத்து ஏத்தப் பெற்ற அக்
கருணை நாவரசினைத் திரைக் கரங்களால்
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட
வருணனும் செய்தனன் முன்பு மா தவம் - 5.1.130

1397 - வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில் - 5.1.131

1398 - அத் திருப் பதியினில் அணைந்த அன்பரை
மெய்த் தவக் குழாம் எலாம் மேவி ஆர்த்தெழ
எத் திசையைனும் அர என்னும் ஓசைபோல்
தத்து நீர்ப் பெருங்கடல் தானும் ஆர்த்ததே - 5.1.132

1399 - தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன்
செழும் திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள் வெண்
கொழுந்து அணி சடையாரைக் கும்பிட்டு அன்புற
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார் - 5.1.133

1400 - ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங் கட்கு என்று
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எவ் உயிர்க்கும்
சான்றாம் ஒருவனைத் தண் தமிழ் மாலைகள் சாத்தினாரே - 5.1.134

1401 - மற்றும் இணையன வண் தமிழ் மாலைகள் பாடி வைகி
வெற்றி மழவிடை வீரட்டர் பாதம் மிக நினைவால்
உற்றதொர் காதலின் அங்கு நின்று ஏகி ஒன்னார் புரங்கள்
செற்றவர் வாழும் திருவதிகைப் பதி சென்று அடைவார் - 5.1.135

1402 - தேவர் பிரான் திரு மாணிக் குழியும் தினை நகரும்
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி புல்லப் பொருள் மொழியின்
காவலர் செல்வத் திருக் கெடிலத்தைக் கடந்து அணைந்தார் - 5.1.136

1403 - வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீயம் இறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்து அருள
மஞ்சிவர் மாடத் திருவதிகைப் பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்கத் தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார் - 5.1.137

1404 - மணி நெடுந் தோரணம் வண் குலைப் பூகம் மடற் கதலி
இணையுற நாட்டி எழு நிலைக் கோபுரம் தெற்றி எங்கும்
தணிவில் பெருகொளித் தாமங்கள் நாற்றிச் செஞ் சாந்து நீவி
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் - 5.1.138

1405 - மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார்
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்மப்
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர் கொண்டனர் தொண்டரையே - 5.1.139

1406 - தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும்
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப்
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிகச் செஞ் சொல்
மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே - 5.1.140

1407 - கண்டார்கள் கை தலைமேல் குவித்து இந்தக் கருணை கண்டால்
மிண்டாய செங்கை அமண்கையர் தீங்கு விளைக்கச் செற்றம்
உண்டாய்஢ன வண்ணம் எவ் வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும்
தொண்டு ஆண்டு கொண்ட பிரானைத் தொழுது துதித்தனரே - 5.1.141

1408 - இவ் வண்ணம் போல எனைப் பல மாக்கள் இயம்பி ஏத்த
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவிச் செல்ல
அவ் வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம்பவளச்
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தைச் சேர்ந்தனரே - 5.1.142

1409 - உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே
எம் பெருமான் தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று
தம் பரிவால் திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார் - 5.1.143

1410 - அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதைத்
தெரிவரிய பெரும் தன்மைத் திருநாவுக் கரசு மனம்
பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப் பணி செயும் நாள் - 5.1.144

1411 - புல் அறிவில் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினைப் பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினைப் பணிந்து
வல்லமணர் தமை நீத்து மழவிடையோன் தாள் அடைந்தான் - 5.1.145

1412 - வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண் நுதற்குப்
பாடலி புத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான் - 5.1.146

1413 - இந் நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீசத் திருமுனியும் மதிச் சடைமேல்
பன்னாகம் அணிந்தவர் தம் பதி பலவும் சென்று இறைஞ்சிச்
சொன்னாமத் தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார் - 5.1.147

1414 - திருவதிகைப் பதி மருங்கு திரு வெண்ணெய் நல்லூரும்
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வளத் தமிழ் பாடிப்
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகிடம் அணைந்தார் - 5.1.148

1415 - கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி
வார் சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப்
பார் பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார் - 5.1.149

1416 - புன் நெறியாம் அமண் சமயத் தொடக்குண்டு போந்தவுடன்
தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழுந்தமிழ் மாலை முன் நின்று பாடுவார் - 5.1.150

1417 - . பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து
முன் ஆகி எப் பொருட்கும் முடிவாகி நின்றானைத்
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானைச் சங்கரனை
நல் நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும் - 5.1.151

1418 - நீடு திருத் தூங்கானை மாடத்து நிலவு கின்ற
ஆடக மேருச் சிலையான் அருளால் ஓர் சிவபூதம்
மாடொருவர் அறியாமே வாகீசர் திருத் தோலில்
சேடுயர் மூவிலைச் சூலம் சின விடையின் உடன் சாத்த - 5.1.152

1419 - ஆங்கவர் தம் திருத் தோளில் ஆர்ந்த திரு இலச்சினையைத்
தாம் கண்டு மனம் களித்துத் தம் பெருமான் அருள் நினைந்து
தூங்கருவி கண் பொழியத் தொழுது விழுந்து ஆர்வத்தால்
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார் - 5.1.153

1420 - தூங்கானை மாடத்துச் சுடர்க் கொழுந்தின் அடிபரவிப்
பாங்காகத் திருத் தொண்டு செய்து பயின்று அமரும் நாள்
பூங்கானம் மணம் கமழும் பொருவில் திரு அரத் துறையும்
தேங்காவின் முகில் உறங்கும் திருமுது குன்றமும் பணிந்து - 5.1.154

1421 - வண்தமிழ் மென் மலர் மாலை புனைந்தருளி மருங்குள்ள
தண் துறை நீர்ப் பதிகளிலும் தனி விடையார் மேவிடம்
கொண்டருளும் தானங்கள் கும்பிட்டுக் குண திசை மேல்
புண்டரிகத் தடம் சூழ்ந்த நிவாக் கரையே போதுவார் - 5.1.155

1422 - ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வானாறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து
தேனாரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார் - 5.1.156

1423 - நாவுக் கரசரும் இருவர்க்கு
அரியவர் நடம் ஆடிய திரு எல்லை பால்
மேவித் தலம் உற மெய்யில் தொழுத
பின் மேல் மேல் எழுதரும் விரைவோடும்
காவில் களி மயில் மகிழ் உற்று எதிர்
எதிர் ஆடக் கடி கமழ் கமலம் சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
மருதத் தண்பணை வழி வந்தார் - 5.1.157

1424 - முருகில் செறி இதழ் முளரிப்
படுகரில் முது மேதிகள் புதுமலர் மேயும்
அருகில் செறிவனம் என மிக்குயர்
கழை அளவில் பெருகிட வளர் இக்குப்
பெருகிப் புடை முதிர் தரளம் சொரிவன
பெரியோர் அவர் திருவடிக் கண்டு
உருகிப் பரிவுறு புனல் கண் பொழிவன
என முன்புள வயல் எங்கும் - 5.1.158

1425 - அறிவில் பெரியவர் அயல்
நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகை நெறி விடுவீர் இருவினை
பெருகித் தொடர்பிணி உறுபாசம்
பறிவுற்றிட அணையுமின் என்று இருபுடை
பயில் சூழ் சினை மிசை குயில் கூவும்
செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு
திரு நந்தன வனம் எதிர் கண்டார் - 5.1.159

1426 - அவர் முன் பணிவொடு தொழுது
அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
தவம் முன் புரிதலில் வரு தொண்டு
எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம்
இவர் தம் திருவடிவது கண்டு அதிசயம்
என வந்து எதிர் அரகர என்றே
சிவ முன் பயில் மொழி பகர் கின்றன
வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை - 5.1.160

1427 - அஞ்சொல் திருமறை அவர்
முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும்
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும்
நிறை அன்பொடும் உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழி அந்தணர்
பயில் தில்லைத் திரு நகர் எல்லைப்பால் மஞ்சில்
பொலி நெடு மதில் சூழ் குடதிசை
மணி வாயில் புறம் வந்துற்றார் - 5.1.161

1428 - அல்லல் பவம் அற அருளும்
தவ முதல் அடியார் எதிர் கொள அவரோடும்
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின்
வழிபுக்கு எதிர் தொழுது அணை உற்றார்
கல்வித் துறை பல வரு மா மறை முதல்
கரை கண்டு உடையவர் கழல் பேணும்
செல்வக் குடி நிறை நல் வைப்பு இடை
வளர் சிவமே நிலவிய திருவீதி - 5.1.162

1429 - நவ மின் சுடர் மணி நெடு
மாலையும் நறு மலர் மாலையும் நிறை திருவீதிப்
புவனங்களின் முதல் இமையோர்
தடமுடி பொருந்திய மணி போகட்டிப்
பவனன் பணி செய வருணன் புனல்
கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று
எவரும் தொழுது எழும் அடியார் திரு
அலகு இடுவார் குளிர்புனல் விடுவார்கள் - 5.1.163

1430 - மேலம் பரதலம் நிறையும்
கொடிகளில் விரி வெங்கதிர் நுழைவது அரிதாகும்
கோலம் பெருகிய திருவீதியை முறை
குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு
ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம்
உறமெய் கொடு தொழுதுள்புக்கார் - 5.1.164

1431 - வளர் பொன் கனக மணி
திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா
அளவில் பெருகிய ஆர்வத்து இடை
எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும்
புளகச் செறி நிரை விரவத் திருமலி
பொன் கோபுரம் அது புகுவார் முன்
களனில் பொலிவிடம் உடையார் நடநவில்
கனகப் பொது எதிர் கண்ணுற்றார் - 5.1.165

1432 - நீடும் திருவுடன் நிகழும்
பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே
கூடும் படி வரும் அன்பால் இன்புறு
குணம் முன் பெறவரு நிலை கூடத்
தேடும் பிரமனும் மாலும் தேவரும்
முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா
ஆடுங்கழல் புரி அமுதத் திரு நடம்
ஆரா வகை தொழுது ஆர்கின்றார் - 5.1.166

1433 - கையும் தலை மிசை புனை
அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும்
உடன் உருகும் பரிவின
பேறு எய்தும் மெய்யும் தரைமிசை
விழுமுன் பெழுதரும் மின்தாழ் சடையொடு
ஐயன் திருநடம் எதிர் கும்பிடும் அவர்
ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால் - 5.1.167

1434 - இத் தன்மையர் பல முறையும்
தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும்
அத்தன் திரு அருள் பொழியும்
கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்
மெய்த் தன்மை யினில் விருத்தத்
திருமொழி பாடிப் பின்னையும் மேல் மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திரு நேரிசை மொழி பகர்கின்றார் - 5.1.168

1435 - பத்தனாய்ப் பாட
மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால்
அத்தா உன் ஆடல் காண்பான்
அடியனேன் வந்தவாறு என்று
இத்திறம் போற்றி நின்றே
இன் தமிழ் மாலைப் பாடி
கைத் திருத் தொண்டு செய்யும்
காதலில் பணிந்து போந்தார் - 5.1.169

1436 - நீடிய மணியின்
சோதி நிறை திரு முன்றின் மாடும்
ஆடு உயர் கொடி சூழ் பொன்
தேர் அணி திரு வீதி உள்ளும்
கூடிய பணிகள் செய்து
கும்பிடும் தொழிலர் ஆகிப்
பாடிய புனித வாக்கின்
பணிகளும் பயிலச் செய்வார் - 5.1.170

1437 - அருள் பெரு மகிழ்ச்சி
பொங்க அன்னம் பாலிக்கும் என்னும்
திருக் குறுந் தொகைகள் பாடித்
திரு உழவாரங் கொண்டு
பெருத்து எழு காதலோடும் பெரும்
திருத் தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர்
வெண்ணீற்று வண்டலாட - 5.1.171

1438 - மேவிய பணிகள் செய்து
விளங்குநாள் வேட்களத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச்
சென்று முன் வணங்கிப் பாடிக்
காவியம் கண்டார் மன்னும்
திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக்கு அரசர் சென்று
நண்ணினார் மண்ணோர் வாழ - 5.1.172

1439 - சின விடை யேறுகைத்
தோறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து
வன பவள வாய்திறந்து வானவர்க்கும்
தான் அவனே என்கின்றாள் என்று
அனைய திருப்பதிகம் உடன்
அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி
நினைவரியார் தமைப் போற்றி நீடு
திருப்புலியூரை நினைந்து மீள்வார் - 5.1.173

1440 - மனைப் படப்பில் கடல்
கொழுந்து வளை சொரியும் கழிப் பாலை மழுங்கு நீங்கி
நனைச்சினை மென் குளிஞாழல்
பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர் தம் மனம் கோயில்
கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரைத்
தினைத்தனையாம் பொழுது மறந்து
உய்வேனோ எனப் பாடி தில்லை சார்ந்தார் - 5.1.174

1441 - அரியானை என்று எடுத்தே
அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை
பிரியாத பெரிய திருத் தாண்டகச்
செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி
விரியா நின்று எவ் உலகும் விளங்கிய
பொன் அம்பலத்து மேலி ஆடல்
புரியா நின்றவர் தம்மைப் பணிந்து
தமிழால் பின்னும் போற்றல் செய்வார் - 5.1.175

1442 - செஞ்சடைக் கற்றை
முற்றத்து இளநிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை
அருஞ்சொல் வளத் தமிழ் மாலை
அதிசயமாம் படி பாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சு உருகப் பொழி புனல்வார்
கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்
தம் செயலின் ஒழியாத திருப்பணியும்
மாறாது சாரும் நாளில் - 5.1.176

1443 - கடையுகத்தில் ஆழியின்
மேல் மிதந்த கழு மலத்தின் இருந்த செம்கண்
விடை உகைத்தார் திரு அருளால்
வெற்பரையன் பாவை திருமுலைப் பாலோடும்
அடைய நிறை சிவம் பெருக வளர்
ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
உடை மறைப் பிள்ளையார் திருவார்த்தை
அடியார்கள் உரைப்பக் கேட்டார் - 5.1.177

1444 - ஆழிவிடம் உண்ட வரை
அம்மை திருப்பால் அமுதம் உண்ட போதே
ஏழ் இசை வண் தமிழ் மாலை இவன்
எம்மான் எனக் காட்டி இயம்பவல்ல
காழி வரும் பெரும் தகை சீர்
கேட்டலுமே அதிசயமாம் காதல் கூர
வாழி அவர் மலர்க் கழல்கள் வணங்குவதற்கு
மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த - 5.1.178

1445 - அப்பொழுதே அம்பலத்துள்
ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்றுப்
பொய்ப் பிறவிப் பிணி ஓட்டும் திருவீதி
புரண்டு வலம் கொண்டு போந்தே
எப் புவனங்களும் நிறைந்த திருப்பதியின்
எல்லையினை இறைஞ்சி ஏத்திச்
செப்பரிய பெருமையினார் திரு நாரையூர்
பணிந்து பாடிச் செல்வார் - 5.1.179

1446 - தொண்டர் குழாம் புடை சூழத்
தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம்
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து
உருகும் கருணை புறம் பொழிந்து காட்டத்
தெண் திரைவாய்க் கல் மிதப்பில்
உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்
வண் தமிழால் எழுது மறை மொழிந்த
பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார் - 5.1.180

1447 - நீண்ட வரை வில்லியார்
வெஞ்சூலை மடுத்து அருளி நேரே முன்னாள்
ஆண்ட அரசு எழுந்து அருளக்
கேட்டருளி ஆளுடைய பிள்ளையாரும்
காண்டகைய பெரு விருப்புக் கைம்
மிக்க திரு உள்ளக் கருத்தினோடு
மூண்ட அருள் மனத்து அன்பர் புடை சூழ
எழுந்து அருளி முன்னே வந்தார் - 5.1.181

1448 - தொழுது அணை உற்று ஆண்ட
அரசு அன்பு உருகத் தொண்டர் குழாத்திடையே சென்று
பழுதில் பெரும் காதலுடன் அடிபணியப்
பணிந்தவர்தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலக்கையால் எடுத்து
இறைஞ்சி விடையின் மேல் வருவார்தம்மை
அழுது அழைத்துக் கொண்டவர்தாம்
அப்பரே என அவரும் அடியேன் என்றார் - 5.1.182

1449 - அம்பிகை செம் பொன்
கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த
செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக்கு
அரசர் எனச் சிறந்த சீர்த்தி
எம் பெரு மக்களும் இயைந்த
கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம்
பெருகும் ஒலிநிறைத்தார் உலகம் எல்லாம் - 5.1.183

1450 - பிள்ளையார் கழல் வணங்கப்
பெற்றேன் என்று அரசு உவப்பப் பெருகு ஞான
வள்ளலார் வாகீசர் தமை வணங்கப்
பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளம் நிறை காதலினால் ஒருவர்
ஒருவரில் கலந்த உண்மை யோடும்
வெள்ள நீர் திருத்தோணி வீற்று இருந்தார்
கழல் வணங்கும் விருப்பின் மிக்கார் - 5.1.184

1451 - அருள் பெருகு தனிக் கடலும்
உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருள் சமய முதல் சைவ நெறி தான்
பெற்ற புண்ணியக் கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
இருள் கடு உண்டவர் அருளும் உலகம்
எல்லாம் ஈன்றாள் தன் திரு அருளும் எனவும் கூடித்
தெருள் கலை ஞானக் கன்றும் அரசும்
சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே - 5.1.185

1452 - பண் பயில் வண்டு அறை
சோலை சூழும் காழிப் பரமர் திருக் கோபுரத்தைப் பணிந்துள்புக்கு
விண் பணிய ஓங்கு பெரு விமானம்
தன்னை வலம் கொண்டு தொழுது விழுந்த எல்லைச்
சண்பை வரு பிள்ளையார் அப்பர்
உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்னக்
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை
கலை பயிலும் மொழி பொழியக் கசிந்து பாடி - 5.1.186

1453 - பெரிய பெருமாட்டியுடன் தோணி
மீது பேணி வீற்று இருந்து அருளும் பிரான் முன் நின்று
பரிவுறு செந்தமிழ் மாலை பத்தி யோடும்
பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி
அரிய வகை புறம் போந்து பிள்ளையார்
திருமடத்தில் எழுந்து அருளி அமுது செய்து
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள்
போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில் - 5.1.187

1454 - அத்தன்மையினில் அரசும்
பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு இலாத
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில்
திருநாவுக்கரசு திரு உள்ளம் தன்னில்
மைத் தழையும் மணி மிடற்றர் பொன்னி
மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கிப் போற்ற
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு
விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார் - 5.1.188

1455 - ஆண்ட அரசு எழுந்து அருளக்
கோலக் காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு
மீண்ட அருளினார் அவரும் விடை கொண்டு
இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப் பறியலூர் புன்கூர் நீடு
திருக் குறுக்கை திரு நின்றி யூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக்
கண்ணுதலார் கழல் தொழுது கலந்து செல்வார் - 5.1.189

1456 - மேவு புனல் பொன்னி இரு
கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திருச் செம் பொன் பள்ளிபாடிக்
காவுயரும் மயிலாடுதுறை நீள் பொன்னிக்
கரைத் துருத்தி வேள்விக்குடி எதிர் கொள் பாடி
பாவுறு செந்தமிழ் மாலை பாடிப் போற்றிப்
பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடிகாவில் அணைந்து
பணைந்து ஆவடு தண் துறையைச் சார்ந்தார் - 5.1.190

1457 - ஆவடு தண் துறையாரை அடைந்து
உய்ந்தேன் என்ற அளவில் திருத் தாண்டகம் முன்அருளிச் செய்து
மேவு திருக் குறுந்தொகை நேர் இசையும்
சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறு வேறு 1456-2
பாவலர் செந்தமிழ்த் தொடையால் பள்ளித்
தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும்
பூ வயலத்தவர் பரவப் பல நாள் தங்கிப் புரிஉறு
கைத் தொண்டு போற்றிச் செய்வார் - 5.1.191

1458 - எறி புனல் பொன் மணி சிதறும்
திரை நீர்ப் பொன்னி இடை மருதைச் சென்று எய்திஅன்பினோடு
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண்
தமிழ்ப் பாமாலை பல மகிழச் சாத்திப்
பொறி அரவம் புனைந்தாரைத் திரு நாகேச்சுரத்துப்
போற்றி அரும் தமிழ் மாலை புனைந்துபோந்து
செறி விரை நன்மலர்ச் சோலைப் பழையாறு
எய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார் - 5.1.192

1459 - சென்று சேர்ந்து திருச்
சத்தி முற்றத்து இருந்த சிவக் கொழுந்தை
குன்ற மகள் தன் மனக் காதல் குலவும்
பூசை கொண்டு அருளும்
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி
இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து தமிழ்
மொழி மாலைகளும் சாத்துவார் - 5.1.193

1460 - கோவாய் முடுகி என்று
எடுத்துக் கூற்றம் வந்து குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என்று அலைமேல்
பொறித்து வைப்பாய் எனப் புகன்று
நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் நல்லூரில்
வா வா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர் - 5.1.194

1461 - நன்மை பெருகஅருள்
நெறியே வந்து அணைந்து நல்லூரின்
மன்னு திருத் தொண்டனார் வணங்கி
மகிழ்ந்து எழும் பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை
முடிகின்றோம் என்று அவர்தம்
சென்னி மிசைப் பாத மலர்
சூட்டினான் சிவபெருமான் - 5.1.195

1462 - நனைந்தனைய
திருவடி என்தலைமேல் வைத்தார் என்று
புனையும் திருத்தாண்டகத்தால்
போற்றி இசைத்துப் புனிதர் அருள்
நினைந்து உருகி விழுந்து எழுந்து
நிறைந்து மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த
வறியோன் போல் மனம் தழைத்தார் - 5.1.196

1463 - நாவுக்கு மன்னர் திரு நல்லூரில் நம்பர் பால்
மேவுற்ற திருப் பணிகள் மேவுற நாளும் செய்து
பாவுற்ற தமிழ் மாலை பாடிப் பணிந்து ஏத்தித்
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லு நாள் - 5.1.197

1464 - கருகாவூர் முதலாகக்
கண்ணுதலோன் அமர்ந்து அருளும்
திருவாவூர் திருப் பாலைத்துறை
பிறவும் சென்று இறைஞ்சிப்
பெருகு ஆர்வத் திருத் தொண்டு
செய்து பெருந்திரு நல்லூர்
ஒரு காலும் பிரியாதே உள்
உருகிப் பணிகின்றார் - 5.1.198

1465 - ஆளுடைய நாயகன்
தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்
வாளை பாய் புனல் பழனத்
திருப் பழனம் மருங்கு அணைந்து
காளவிடம் உண்டு இருண்ட
கண்டர் பணிக் கலன் பூண்டு
நீள் இரவில் ஆடுவார் கழல்
வணங்க நேர் பெற்றார் - 5.1.199

1466 - அப்பதியைச் சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்
ஒப்பரிய தானங்கள் உள் உருகிப் பணிந்தணைவார்
மெய்ப்பொருள்தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்
செப்பருஞ்சீர் அப்பூதி அடிகள் ஊர் திங்களூர் - 5.1.200

1467 - அந்தணரின் மேம்பட்ட அப்பூதி அடிகளார்
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்ப்
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர் தம் மனை நண்ண - 5.1.201

1468 - மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்
சுற்றமுடன் களி கூரத் தொழுது எழுந்து சூழ்ந்து மொழிக்
கொற்றவரை அமுது செயக் குறை கொள்வார் இறைகொள்ளப்
பெற்ற பெரும் தவத் தொண்டர் திரு உள்ளம் பெறப் பெற்றார் - 5.1.202

1469 - காண்டகைமை இன்றியுமுன் கலந்த பெருங் கேண்மையினார்
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்
ஆண்ட அரசு அமுது செயத் திரு அமுதாம் படி அமைத்து - 5.1.203

1470 - திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்றவர் தம்
பெருநாமம் சாத்திய அப்பிள்ளைதனை அழைத்து அன்பு
தருஞானத் திருமறையோர் தண்டலையின் வண்கதலிக்
குரு நாளக் குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார் - 5.1.204

1471 - ஆங்கு அவனும் விரைந்து எய்தி அம்மருங்கு தாழாதே
பூங் கதலிக் குருத்து அரியப் புகும் அளவில் ஒரு நாகம்
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள
ஓங்கு கதலிக் குருத்துக் கொண்டு ஒல்லை வந்து அணைந்தான் - 5.1.205

1472 - தீய விடம் தலைக் கொள்ளத் தெருமந்து செழும் குருத்தைத்
தாயகரத்தினில் நீட்டித் தளர்ந்து தனைத் தழல் நாகம்
மேயபடி உரை செய்யான் விழக் கண்டு கெட்டு ஒழிந்தோம்
தூயவர் இங்கு அமுது செயத் தொடங்கார் என்று அது ஒளித்தார் - 5.1.206

1473 - தம் புதல்வன் சவம் மறைத்துத் தடுமாற்றம் இலராகி
எம் பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார் - 5.1.207

1474 - அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்க்
கொன்றை நறும் சடையார் தம் கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று கொலாம் எனப் பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப்
பின்றைவிடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான் - 5.1.208

1475 - அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது
இருந்ததற்குத் தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க
வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர்
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள் - 5.1.209

1476 - திங்களூர் தனில் நின்றும் திருமறையோர் பின் செல்லப்
பைங்கண் விடைத் தனிப்பாகர் திருப்பழனப் பதி புகுந்து
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார் - 5.1.210

1477 - புடை மாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொன் கழல் கீழ்
அடை மாலைச் சீலம் உடை அப்பூதி அடிகள் தமை
நடைமாணச் சிறப்பித்து நன்மை புரி தீந்தமிழின்
தொடைமாலைத் திருப்பதிகச் சொன்மாலை பாடினார் - 5.1.211

1478 - எழும் பணியும் இளம்பிறையும் அணிந்தவரை எம் மருங்கும்
தொழும்பணி மேற் கொண்டு அருளி திருச்சோற்றுத் துறை முதலாத்
தழும்புறு கேண்மையில் நண்ணித் தானங்கள் பல பாடிச்
செம்பழனத்து இறை கோயில் திருத் தொண்டு செய்து இருந்தார் - 5.1.212

1479 - சால நாள் அங்கு அமர்ந்து தம் தலைமேல் தாள் வைத்த
ஆலமார் மணி மிடற்றார் அணி மலர்ச் சேவடி நினைந்து
சேலுலாம் புனல் பொன்னித் தென்கரை ஏறிச் சென்று
கோல நீள் மணி மாடத் திரு நல்லூர் குறுகினார் - 5.1.213

1480 - அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப் பணி செயும் நாள்
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு
செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார் - 5.1.214

1481 - நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் போய்ப் பழையாறை
பல்லூர் வெண்டலைக் கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து
சொல்லூர் வண்தமிழ் பாடி வலஞ் சுழியைத் தொழுது ஏத்தி
அல்லூர் வெண் பிறை அணிந்தார் திருக் குடமூக்கு அணைந்து இறைஞ்சி - 5.1.215

1482 - நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர்
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி
மேலூர்தி விடைக் கொடியார் மேவும் இடம் பல பாடிக்
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திரு வாஞ்சியம் அணைந்தார் - 5.1.216

1483 - பெருவாச மலர்ச் சோலைப் பெரு வேளூர் பணிந்து ஏத்தி
முருகாரும் மலர்க் கொன்றை முதல்வனார் பதி பிறவும்
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார் - 5.1.217

1484 - ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள் தாம்
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார்
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
சேண் திகழ் வீதிகள் பொலியத் திரு மலி மங்கலம் செய்தார் - 5.1.218

1485 - வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில்
கல்லே மிதப்பாகப் போந்தவர் வந்தார் எனும் களிப்பால்
எல்லையில் தொண்டர் எயில்புறம் சென்று எதிர் கொண்டபோது
சொல்லின் அரசர் வணங்கித் தொழுது உரைசெய்து அணைவார் - 5.1.219

1486 - பற்று ஒன்று இலாவரும் பாதகர் ஆகும் அமணர் தம் பால்
உற்ற பிணி ஒழிந்து உய்யப் போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
புற்றிடம் கொண்டான் தன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் என்று
அற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள் அணைந்தார் - 5.1.220

1487 - சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி
ஆழி வரைத் திரு மாளிகை வாயில் அவை புகுந்து
நீள் சுடர் மா மணிப் புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார் - 5.1.221

1488 - கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூரக் கண்கள்
தண்துளி மாரி பொழியத் திரு மூலட்டானர் தம்மைப்
புண்டரிகக் கழல் போற்றித் திருத்தாண்டகம் புனைந்து - 5.1.222

1489 - காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலைப் பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி
ஈண்டு மணிக் கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள் திருவாயில் புறத்து அணைந்தார் - 5.1.223

1490 - செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து
கொய்யுமா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரைக்
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று
எய்து அரிய கை யறவால் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே - 5.1.224

1491 - மார் பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுரவாக்கில்
சேர் வாகும் திருவாயில் தீம் தமிழின் மாலைகளும் செம் பொன் தாளே
சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்
பார் வாழத் திரு வீதிப் பணி செய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார் - 5.1.225

1492 - நீடு புகழ்த் திருவாரூர் நிலவு மணிப் புற்றிடம் கொள் நிருத்தர் தம்மைக்
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப்
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார் - 5.1.226

1493 - நான் மறைநூல் பெருமை நமி நந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை
பான்மை நிலையால் அவரைப் பரமர் திருவிருத்ததுள் வைத்துப் பாடி
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதிப் பணி செய்து அங்கு அமரும் நாளில் - 5.1.227

1494 - நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடிக்
கார் ஆரும் கறைக் கண்டர் கீழ் வேளுர் கன்றாப் பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர் தனில் மீண்டும் அணைந்தார் அன்றே - 5.1.228

1495 - மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப் பெருமாள் பவனி தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களி கூர வரும் பெருமை முறைமை யெலாம் கண்டு போற்றி
நாவினுக்குத் தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திரு அருளினாலே - 5.1.229

1496 - திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவ பெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்புடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்துப்
பொருப்பரையன் மடப் பாவை இடப் பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார் - 5.1.230

1497 - அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் திருப்புகலி அதன் கண் நின்றும்
பன்னாகப் பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சிப் பொருவு இல் சீர்த்தி
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை - 5.1.231

1498 - ஆண்ட அரசு எழுந்து அருளி அணி ஆரூர் மணிப் புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியைக் கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பி னோடும்
ஈண்டு பெரும் தொண்டர் குழாம் புடை சூழ எழுந்து அருளி எதிரே சென்றார் - 5.1.232

1499 - கரண்டமலி தடம் பொய்கைக் காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு
வரன்று மணிப் புனற்புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டு வரும் திரு நீற்றுத் தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில்
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாகி அணைந்த போல் இசைந்த அன்றே - 5.1.233

1500 - திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மை
பெரு ஞான சம்பந்தப் பிள்ளையார் எதிர் வணங்கி அப்பரே நீர்
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற
அரு நாமத்து அஞ்செழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளிச் செய்தார் - 5.1.234

1501 - சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும்
மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார்
முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை - 5.1.235

1502 - அம்மொழி மாலைச் செந்தமிழ் கேளா அணி சண்பை
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம் மலர் வாவித் தென் திரு ஆரூர் கும்பிட்டே
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார் - 5.1.236

1503 - மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்கச் செந்
தாமரை ஓடைச் சண்பையர் நாதன் தான் ஏக
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில் - 5.1.237

1504 - அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசுந்தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுதாரப்
பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார் - 5.1.238

1505 - தேவர் பிரானைத் தென் புகலூர் மன்னிய தேனைப்
பா இயல் மாலைச் செந்தமிழ் பாடிப் பரிவோடு
மேவிய காலம் தோறும் விருப்பில் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார் - 5.1.239

1506 - சீர் தரு செங்காட்டங் குடி நீடும் திருநள்ளாறு
ஆர் தரு சோலை சூழ்தரு சாந்தை அயவந்தி
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல்
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார் - 5.1.240

1507 - அப்படிச் சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்
துப்பு உறழ் வேணிக் கண் நுதலாரைத் தொழுது இப்பால்
மெய்ப் பொருள் ஞானம் பெற்றவர் வேணு புரத்து எங்கள்
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில் - 5.1.241

1508 - பிள்ளையார் எழுந்து அருளப் பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர் கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்கண்
வள்ளலார் சிறுத் தொண்டர் மற்று அவர் பால் எழுந்து அருள
எள் அரும் சீர் நீல நக்கர் தாமும் எழுந்து அருளினார் - 5.1.242

1509 - ஆங்கு அணையும் அவர்களுடன் அப்பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார் திரு மடத்தில் உடனாகப்
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை
நீங்கரிய திருத் தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார் - 5.1.243

1510 - திருப் பதிகச் செழுந்தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்றுப்
பொருப்பு அரையன் மடப்பாவை இடப் பாகர் பொன் தாளில்
விருப்பு உடைய திருத் தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார் - 5.1.244

1511 - அந் நாளில் தமக்கு ஏற்ற திருத் தொண்டின் நெறி ஆற்ற
மின்னார் செஞ்சடை அண்ணல் மேவும் பதி எனைப் பலவும்
முன்னாகச் சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்குப்
பொன்னாரும் மணி மாடப் பூம் புகலூர் தொழுது அகன்றார் - 5.1.245

1512 - திரு நீல நக்க அடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெருநீர்மை அடியார்கள் பிறரும் விடை கொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செஞ்சடைக் கரந்தார் திரு அம்பர் வணங்கினார் - 5.1.246

1513 - செங்குமுத மலர் வாவித் திருக்கடவூர் அணைந்து அருளிப்
பொங்கிய வெங்கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்திக்
குங்குலியக் கலயனார் திருமத்தில் குறை அறுப்ப
அங்கு அவர்பால் சிவன் அடியாருடன் அமுது செய்தார்கள் - 5.1.247

1514 - சீர் மன்னும் திருக் கடவூர்த் திருமயானமும் வணங்கி
ஏர் மன்னும் இன்னிசைப்பாப் பல பாடி இனிது அமர்ந்து
கார் மன்னும் கறைக் கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று
தேர் மன்னும் மணி வீதித் திரு ஆக்கூர் சென்று அணைந்தார் - 5.1.248

1515 - சார்ந்தார் தம் புகல் இடத்தைத் தான் தோன்றி மாடத்துக்
கூர்ந்து ஆர்வம் உறப் பணிந்து கோதில் தமிழ்த்தொடை புனைந்து
வார்த்து ஆடும் சடையார் தம் பதி பலவும் வணங்கி உடன்
சேர்ந்தார்கள் தம் பெருமான் திரு வீழி மிழலையினை - 5.1.249

1516 - வீழி மிழலை வந்து அணைய மேவும் நாவுக்கு அரசினையும்
காழி ஞானப் பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலினால்
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர் கொண்டு வணங்க வணங்கி உள்புக்கார் - 5.1.250

1517 - மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு
நீடு கதலி தழைப் பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்துப்
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார் - 5.1.251

1518 - சென்று உள் புகுந்து திருவீழி மிழலை அமர்ந்த செங்கனகக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி
வென்றி விடையார் சேவடிக் கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார் - 5.1.252

1519 - கைகள் குவித்துக் கழல் போற்றிக் கலந்த அன்பு கரைந்து உருக
மெய்யில் வழியும் கண் அருவி விரவப் பரவும் சொல் மாலை
செய்ய சடையார் தமைச் சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று
உய்யும் நெறித் தாண்ட தம் மொழிந்து அங்கு ஒழியாக் காதல் சிறந்து ஓங்க - 5.1.253

1520 - முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத
பொன்னார் மேனி மணி வெற்பைப் பூ நீர் மிழலையினில் போற்றிப்
பல் நாள் பிரியா நிலைமையினால் பயிலக் கும்பிட்டு இருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அருந்தவர்கள் - 5.1.254

1521 - சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின்
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம்
பாரின் மலிந்த இலம் பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால் - 5.1.255

1522 - வையம் எங்கும் வற்கடம் ஆய்ச் செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார் தமக்கும் நாவுக்கு அரசருக்கும்
கையில் மானும் மழுவும் உடன் காணக் கனவில் எழுந்து அருளிச்
செய்ய சடையார் திருவீழி மிழலை உடையார் அருள் செய்வார் - 5.1.256

1523 - கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும்
ஏல உம்மை வழி படுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்து அருளிக் குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறியப் படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார் - 5.1.257

1524 - விண்ணின் நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண் தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள் தொறும் காசு படிவைத்து அருள நானிலத்தில்
எண்ணில் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும் - 5.1.258

1525 - அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருகப் பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்கஎன இரண்டு பொழுதும் பறை நிகழ்த்திச்
சொல்லால் சாற்றிச் சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார் - 5.1.259

1526 - ஈசர் மிழலை இறையவர் பால் இமையப் பாவை திருமுலைப் பால்
தேசம் உய்ய உண்டவர் தாம் திருமா மகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கைத் தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர் - 5.1.260

1527 - ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படிக் காசால்
ஈறு இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள்
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ண உண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அந் நாளில் - 5.1.261

1528 - காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி
நீல கண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார் - 5.1.262

1529 - வாய்ந்த மிழலை மா மணியை வணங்கிப் பிரியா விடை கொண்டு
பூந்தண் புனல் சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள்
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய்ச்
சேர்ந்தார் செல்வத் திருமறைக்காடு எல்லை இல்லாச் சீர்த்தியினார் - 5.1.263

1530 - மன்றல் விரவு மலர்ப் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில் தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக் காட்டுக்
குன்ற வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம் கொண்டு
சென்று சேர்ந்தார் தென் புகலிக் கோவும் அரசும் திரு முன்பு - 5.1.264

1531 - பரவை ஓதக் கழிக்கானல் பாங்கு நெருங்கும் அப் பதியில்
அரவச் சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து
உரவக் கதவம் திருக் காப்புச் செய்த அந்நாள் முதல் இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார் - 5.1.265

1532 - தொல்லை வேதம் திருக் காப்புச் செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார் தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லாப் பெரும் புகழார் இதனை அங்குக் கேட்டு அறிந்தார் - 5.1.266

1533 - ஆங்கு அப் பரிசை அறிந்து அருளி ஆழித் தோணி புரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்குத்
தேம்கா திருவோம் நேர் இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு
நீங்கப் பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கு அரசர் - 5.1.267

1534 - உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே
பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான்
தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும் - 5.1.268

1535 - வேத வளத்தின் மெய்ப் பொருளின் அருளால் விளங்கும் மணிக் கதவம்
காதல் அன்பர் முன்பு திருக் காப்பு நீங்கக் கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்த தும்பர் ஆர்ப்பும் மறை ஒலியும் - 5.1.269

1536 - அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவக் கன்றும்
இன்ப வெள்ளத்து இடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்துப் பரவி மொழி மாலைகள் பாடி
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார் - 5.1.270

1537 - புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இக் கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திருமுலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலிக் கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என - 5.1.271

1538 - சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திரு நாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிதுடனே
திண் பொன் கதவம் திருக் காப்புச் செய்து எடுத்த திருப் பாட்டில் - 5.1.272

1539 - அது கண்டு உடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள் செய்யப் பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவு உற்றார்
எதிர் பொன் திருவாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது ஆல் - 5.1.273

1540 - அங்கு நிகழ்ந்த அச் செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்துப்
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலிப் பெரும் தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின் - 5.1.274

1541 - அரிதில் திறக்கத் தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் எனக் கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர் - 5.1.275

1542 - மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண்
உன்னித் துயிலும் பொழுதின் கண் உமை ஓர் பாகம் உடையவர் தாம்
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோலப் பொலிவினொடும்
துன்னி அவர்க்கு வாய் மூரில் இருப்போம் தொடர வா என்றார் - 5.1.276

1543 - போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி
ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து
வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள - 5.1.277

1544 - சீரார் பதியின் நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கு அரசர்
ஆரா அன்பில் ஆரமுதம் உண்ண எய்தா வாறே போல்
நீரார் சடையார் எழுந்து அருள நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணையப் பெறுவார் எய்தப் பெற்று இலரால் - 5.1.278

1545 - அன்ன வண்ணம் எழுந்து அருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதனுள் புக்கு அருளத்
துன்னும் தொண்டர் அம் மருங்கு விரைந்து தொடரப் போந்த படி
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார் - 5.1.279

1546 - அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என - 5.1.280

1547 - மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார் - 5.1.281

1548 - பாடும் தமிழ் மாலைகள் கொண்டு பரமர் தாமும் எழுந்து அருள
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெரும் தொண்டர் தொழுது போற்றித் துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அந் நகரில் உடன் உறைந்தார் - 5.1.282

1549 - ஆண்ட அரசும் பிள்ளையார் உடனே அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ வாய் மூர் அடிகள் போற்றி
மூண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவர் ஒடு
மீண்டு வந்து திருமறைக் காடு எய்தி விமலர் தாள் பணிந்தார் - 5.1.283

1550 - ஆதி முதல்வர் தமைப் பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள்
சீத மதி வெண் குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம்
கோதில் குணத்துப் பாண்டி மா தேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர் தமைக் காண - 5.1.284

1551 - வந்து சிவனார் திருமறைக் காடு எய்தி மன்னு வேணுபுரி
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர் பால் எய்தி அடி வணங்க
சிந்தை மகிழ்ந்து தீது இன்மை வனவத் தீங்கும் உளவாமோ
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார் - 5.1.285

1552 - சைவ நெறி வைதிகம் நிற்கச் சழக்கு நெறியைத் தவம் என்னும்
பொய் வல் அமணர் செயல் தன்னைப் பொறுக்க கில்லோம் எனக் கேட்டே
அவ் வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்கத்
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பைத் திரு மறையோர் - 5.1.286

1553 - ஆய பொழுது திரு நாவுக்கரசு புகலி ஆண் தகைக்குக்
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடுவினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார் - 5.1.287

1554 - என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்து உடையேன் அங்குத் தீங்கு புரி அமணர்
நின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறி பாரித்து அன்றி
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடைய பிள்ளையார் - 5.1.288

1555 - போமா துணிந்து நீர் அங்குப் போகப் போதா அவ் அமணர்
தீ மாயையினை யானே போய்ச் சிதைத்து வருகின்றேன் என்ன
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டது அரசு இருப்பத்
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞானத் தலைவனார் - 5.1.289

1556 - வேணு புரக்கோன் எழுந்து அருள விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர் தம்மைப் போற்றி இசைத்துப்
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர்
தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார் - 5.1.290

1557 - சோலை மறைக் காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய்
வேலை விடம் உண்டவர் வீழி மிழலை மீண்டும் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகைக் காரோணம் பிறவும் தாம் பணிந்து
சாலு மொழி வண் தமிழ்ப் பாடித் தலைவர் மிழலை வந்து அடைந்தார் - 5.1.291

1558 - வீழி மிழலை தனிப் பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின் நின்று இழிந்த
வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளை போற்றிசைத்துத்
தாழும் நாளில் பிறபதியும் பணியும் காதல் தலை நிற்பார் - 5.1.292

1559 - பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார் - 5.1.293

1560 - செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில்
மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுது அருளக் கண்டவாற்றால் அமணர்கள் தம்
பொய் கொள் விமானம் எனக் கேட்டுப் பொறாத உள்ளம் மிகப் புழுங்கி - 5.1.294

1561 - அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்
கந்தம் மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார் - 5.1.295

1562 - வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்று
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார் - 5.1.296

1563 - அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக்
குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரிய
செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி - 5.1.297

1564 - கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி
அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு
குண்டர் செய்த வஞ்சணையைக் குறித்து வேந்தன் குலவு பெரும்
தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான் - 5.1.298

1565 - ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்தற் பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கியபின்
ஆன வழி பாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார் - 5.1.299

1566 - தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார் - 5.1.300

1571 - பொங்கு புனலார் பொன்னியில் இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சித் தமிழ் மாலைகளும் சாத்திப் போய்
எங்கும் நிறைந்த புகழ் ஆளர் ஈறில் தொண்டர் எதிர் கொள்ளச்
செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்று அணைந்தார் - 5.1.301

1572 - சிலந்திக்கு அருளும் கழல் வணங்கிச் செஞ்சொல் மாலை பல பாடி
இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடியபின்
சோதித் திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும்
நலம் கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் நண்ணினார் - 5.1.302

1573 - மற்றப் பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கை தொழுது
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரியச்
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்கின்றார் - 5.1.303

1574 - வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தம் உற நீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்குச் சித்தம் அலையாதே
மொழி வேந்தரும் முன் எழுந்து அருள முருகு ஆர் சோலைப் பைஞ்ஞீலி
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய் - 5.1.304

1575 - காவும் குளமும் முன் சமைத்துக் காட்டி வழி போம் கருத்தினால்
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு அரியவர் தாம் - 5.1.305

1576 - அங்கண் இருந்த மறையவர் பால் ஆண்ட அரசும் எழுந்து அருள
வெங்கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்
இங்கு என் பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இப்
பொங்கு குளத்தில் குடித்து இளைப்புப் போக்கிப் போவீர் எனப் புகன்றார் - 5.1.306

1577 - நண்ணும் திருநாவுக்கு அரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல்
உண்ணும் என்று திருமறையோர் உரைத்துப் பொதி சோறு அளித்தலுமே
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய
தண்ணீர் அமுது செய்து அருளித் தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார் - 5.1.307

1578 - எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார் யான் திருப்பைஞ் ஞீலிக்குப் போவ என்று உரைப்ப
ஒப்பு இலாரும் யான் அங்குப் போகின்றேன் என்று உடன் போந்தார் - 5.1.308

1579 - கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மைத் தவத்து மேலவர் தாம்
ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப்
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரிபயில் வித்தார் - 5.1.309

1580 - பைஞ் ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி
மைஞ் ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து
மெய்ஞ் ஞீலிர் மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள் பாடிக்
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார் - 5.1.310

1581 - நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும்
காதல் கூரச் சென்று இறைஞ்சிக் கலந்த இசை வண் தமிழ் பாடி
மாதோர் பாகர் அருளாலே வடபால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்த திரு அண்ணாமலையை நண்ணினார் - 5.1.311

1582 - செங்கண் விடையார் திரு அண்ணா மலையைத் தொழுது வலம் கொண்டு
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர் நிற்கும்
அங்கண் அரசைத் தொழுது எழுந்து திளைத்துத் திருநாவுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் - 5.1.312

1583 - அண்ணாமலை மலை மேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர் தம்
கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்து எழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட்டு உருகும் சிந்தை உடன்
பண்ணார் பதிகத் தமிழ் பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார் - 5.1.313

1584 - பணியார் வேணிச் சிவ பெருமான் பாதம் போற்றிப் பணி செயும் நாள்
மணியார் கண்டத்து எம் பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும்
தணியாக் காதலுடன் சென்று வணங்கித் தக்க பணி செய்வார்
அணியார் தொண்டைத் திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார் - 5.1.314

1585 - காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான் ஆறும்
சூதமலி தண் பணைப் பதிகன் பலவும் கடந்து சொல்லிக்கு
நாதர் போந்து பெரும் தொண்டை நன்னாடு எய்தி முன் ஆகச்
சீத மலர் மென் சோலை சூழ் திரு ஒத்தூரில் சென்று அடைந்தார் - 5.1.315

1586 - செக்கர் சடையார் திரு ஒத்துத்தூர் தேவர் பிரானார் தம் கோயில்
புக்கு வலம் கொண்டு எதிர் இறைஞ்சிப் போற்றிக் கண்கள் புனல் பொழிய
முக் கண் பிரானை விரும்பும் மொழித் திருத் தாண்டகங்கள் முதலாகத்
தக்க மொழி மாலைகள் சாத்திச் சார்ந்து பணி செய்து ஒழுகுவார் - 5.1.316

1587 - செய்ய ஐயர் திரு ஒத்தூர் ஏத்திப் போந்து செழும் புவனம்
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கித்
தையல் தழுவக் குழைந்த பிரான் தங்கும் தெய்வப் பதி என்று
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார் - 5.1.317

1588 - ஞாலம் உய்யத் திருவதிகை நம்பர் தம் பேர் அருளினால்
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம்
சால மலர்ந்து களி சிறப்பத் தழைத்த மனங்கள் தாங்குவார் - 5.1.318

1589 - மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள்
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொற்குடம் தீபம்
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணிந்ணள் காஞ்சி அலங்கரித்தார் - 5.1.319

1590 - தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர் பால்
கொண்ட வேடப் பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும்
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர் தம்மை எதிர் கொண்டார் - 5.1.320

1591 - எதிர் கொண்டு இறைஞ்சும் சீர் அடியார் தம்மை இறைஞ்சி எழுந்து அருளி
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வானநதி
குதி கொண்டு இழிந்த சடைக் கம்பர் செம் பொன் கோயில் குறுகினார்
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர் - 5.1.321

1592 - திரு வாயிலினைப் பணிந்து எழுந்து செல்வத் திரு முன்றிலை அணைந்து
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து
வருவார் செம் பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மணி மேனிப்
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சிப் பேரா அன்பு பெருக்கினார் - 5.1.322

1593 - வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க் கால் தோறும் வரும் புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்பச்
சேர்ந்த நயனப் பயன் பெற்றுத் திளைப்பத் திருவேகம்பர் தமை
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார் - 5.1.323

1594 - கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப்
பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின்
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார் - 5.1.324

1595 - கையார்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும்
செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி
மையார்ந்த மிடற்றர் திரு மயானத்தை வலம் கொண்டு
மெய்யார்வம் உறத் தொழுது விருப்பினோடு மேவு நாள் - 5.1.325

1596 - சீர் வளரும் மதில் கச்சி நகர்த் திரு மேல் தளி முதலாம்
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்
ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால்
சார்வுறு மாலைகள் சாத்தித் தகும் தொண்டு செய்திருந்தார் - 5.1.326

1597 - அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண்
மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச்
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித்
துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால் - 5.1.327

1598 - ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப்
பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின்
ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார் - 5.1.328

1599 - திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தித் திங்களார்
நெருக்கச் செஞ்சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார்
வருக்கைச் செஞ்சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டு இடை போய்ப்
பருக்கைத் திண் களிற்று உரியார் கழுக் குன்றின் பாங்கு அணைந்தார் - 5.1.329

1600 - நீடு திருக் கழுக் குன்றில் நிருத்தனார் கழல் வணங்கிப்
பாடு தமிழ்த் தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
சூடும் இனம் பிறை முடியார் தமைத் தொழுது போற்றிப் போய்
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார் - 5.1.330

1601 - திருவான்மியூர் மருந்தைச் சேர்ந்து பணிந்த அன்பினொடும்
பெரு வாய்மைத் தமிழ்பாடி அம் மருங்கு பிறப்பு அறுத்துத்
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சித் தமிழ் வேந்தர்
மருவாரும் மலர்ச் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார் - 5.1.331

1602 - வரை வளர் மா மயில் என்ன மாடமிசை மஞ்சாடும்
தரை வளர் சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள் வணங்கி
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவாரப் படை ஆளி
திரை வளர் வேலைக் கரை போய் திரு ஒற்றியூர் சேர்ந்தார் - 5.1.332

1603 - ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி
நற்கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டிப்
பொற்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர் கொண்டு கொடு புக்கார் வழித் தொண்டர் - 5.1.333

1604 - திரு நாவுக் கரசரும் அத் திரு ஒற்றியூர் அமர்ந்த
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப் புக்கு
ஒரு ஞானத் தொண்டர் உடன் உருகி வலம் கொண்டு அடியார்
கரு நாமம் தவிர்ப்பாரைக் கை தொழுது முன் வீழ்ந்தார் - 5.1.334

1605 - எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானைத்
தொழுத ஆர்வம் உற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழுதாரை கண் பொழிய விதிர்ப்பு உற்று விம்மினார் - 5.1.335

1606 - வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப்
பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார்
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்
கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார் - 5.1.336

1607 - விளங்கு பெருந் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே
உளங்கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக் குறுந் தொகைகள்
களங்கொள் திரு நேரிசைகள் பல பாடிக் கை தொழுது
வளங்கொள் திருப் பதியம் தனில் பல நாள்கள் வைகினார் - 5.1.337

1608 - அங்குறையும் நாளின்கண் அருகுளவாம் சிவாலயங்கள்
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால்
பொங்கு புனல் திரு ஒற்றியூர் தொழுது போந்து உமையாள்
பங்குடையார் அமர்ந்திருப் பாசூராம் பதி அணைந்தார் - 5.1.338

1609 - திருப்பாசூர் நகர் எய்திச் சிந்தையினில் வந்து ஊறும்
விருப்பு ஆர்வம் மேற் கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய
இருப்பாரைப் புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனிப்
பொருப்பார் வெஞ்சிலையாரைத் தொழுது எழுந்து போற்றுவார் - 5.1.339

1610 - முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச்
சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும்
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர் - 5.1.340

1611 - அம் மலர்ச் சீர்ப் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின்
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழுக் குடிமைச்
செம்மையினால் பழையனூர்த் திரு ஆல வனம் பணிந்தார் - 5.1.341

1612 - திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின்
ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப்
பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும்
மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார் - 5.1.342

1613 - பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார்
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரிக் கரை பணிந்து
தொல் கலையின் பெருவேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்
மல்கு திருக் காளத்தி மா மலை வந்து எய்தினார் - 5.1.343

1614 - பொன் முகலித் திருநதியின் புனித நெடும் தீர்த்தத்தில்
முன் முழுகிக் காளத்தி மொய் வரையின் தாழ்வரையில்
சென்னி உறப் பணிந்து எழுந்து செம் கண் விடைத் தனிப்பாகர்
மன்னும் மலை மிசை ஏறி வலம் கொண்டு வணங்குவார் - 5.1.344

1611 - காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்
காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய்
நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார் - 5.1.345

1612 - மலைச் சிகரச் சிகா மணியின் மருங்கு உற முன்னே நிற்கும்
சிலைத் தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி
அலைத்து விழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்து இழியத்
தலைக் குவித்த கையினராய்த் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார் - 5.1.346

1613 - சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து
தாணுவினை அம்மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்
பேணிதிருக் கயிலை மலை வீற்று இருந்த பெருங் கோலம்
காணுமது காதலித்தார் கலை வாய்மைக் காவலனார் - 5.1.347

1614 - அங்கண் மா மலைமேல் மருந்தை வணங்கியார் அருளால் மிகப்
பொங்கு காதலின் உத்தரத் திசை மேல் விருப்போடு போதுவார்
துங்க மால் வரை கானியாறு தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால் விடை அண்ணல் மேவும் திருப் பருப்பதம் எய்தினார் - 5.1.348

1615 - மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்னகாதிபர் காம சாரிகளே முதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார் - 5.1.349

1616 - அம் மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படைச்
செம்மல் வெண் கயிலைப் பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்
எம் மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்து உளோர்
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார் - 5.1.350

1617 - கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்
திரு நதித் துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்
பெரு நலம் கிளர் நாடும் எண்ணில பின்படப் பொற்பினால்
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார் - 5.1.351

1618 - அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய்
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல்
பங்கயப் பழனத்து மத்திய பை திரத்தினை எய்தினார் - 5.1.352

1619 - அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம் கொளும்
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்
பின் அணைந்தவர் தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய்
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கற்சுரம் முந்தினார் - 5.1.353

1620 - மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச்
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர்
ஏகினார் இரவும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார் - 5.1.354

1621 - ஆயவார் இருளின் கண் ஏகும் அவ் அன்பர் தம்மை அணைந்து முன்
தீயவாய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சுகால்
வாய நாக மணிப் பணங் கொள் விளக்கு எடுத்தன வந்து
தோய வானவராயினும் தனி துன் அருஞ்சுரம் முன்னினார் - 5.1.355

1622 - வெங்கதிர்ப் பகல் அக்கடத்து இடை வெய்யவன் கதிர் கை பரந்து
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன
பொங்கழற்று எறு பாலை வெந்நிழல் புக்க சூழல் புகும் பகல்
செங்கதிர்க் கனல் போலும் அத்திசை திண்மை மெய்த்தவர் நண்ணினார் - 5.1.356

1623 - இங்ஙனம் இரவும் பகற் பொழுதும் அரும் சுரம் எய்துவார்
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசைத் தசை தேயவும்
மங்கை பங்கர் தம் வெள்ளிமால் வரை வைத்த சிந்தை மறப்பரோ
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார் - 5.1.357

1624 - கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்தபின்
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட
மொய் கடுங் கனல் வெம்பரல் புகை மூளும் அத்த முயங்கியே
மை கொள் கண்டர் தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால் - 5.1.358

1625 - மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட
நேர் வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடு நீடு
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு ஊகைக்கும் உடம்பு அடங்கம் ஊன் கெடச்
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர் - 5.1.359

1626 - அப்புறம் புரள்கின்ற நீள் இடை அங்கம் எங்கும் அரைந்திடச்
செப்ப அரும் கயிலைச் சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்
மெய்ப் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புறச் செயல் இன்றி அந்நெறி தங்கினார் தமிழ் ஆளியார் - 5.1.360

1627 - அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்
மன்னும் தீந்தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவராம் படியால் - 5.1.361

1628 - வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இவ் உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெங்கடத்து எய்தியது என் என இசைத்தார் - 5.1.362

1629 - மாசில் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்
தேசுடைச் சடை மவுலியும் நீறும் மெய் திகழ
ஆசில் மெய்த்தவர் ஆகி நின்றவர் தமை நோக்கிப்
பேச உற்றதோர் உணர்வு உற விளம்புவார் பெரியோர் - 5.1.363

1630 - வண்டுலாங் குழல் மலை மகளுடன் வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும் அப் பரிசு அவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்
கொண்ட என் குறிப்பு இது முனியே எனக் கூற - 5.1.364

1631 - கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு
பயிலும் மானுடப் பான்மையோர் அடைவதற்கு எளிதோ
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிதால்
வெயில் கொள் வெஞ்சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி - 5.1.365

1632 - மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார் - 5.1.366

1633 - ஆங்கு மற்றவர் துணிவு அறிந்தவர் தமை அறிய
நீங்கு மாதவர் விசும்பு இடைக் கரந்து நீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்பத்
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார் - 5.1.367

1634 - அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே
விண்ணிலே மறைந்து அருள் புரி வேத நாயகனே
கண்ணினால் திருக் கயிலையில் இருந்த நின் கோலம்
நண்ணி நான் தொழ நயந்து அருள் புரி எனப் பணிந்தார் - 5.1.368

1635 - தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இப் பொய்கை
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அம் முறைமை
பழுதில் சீர்த் திருவையாற்றில் காண் எனப் பணித்தார் - 5.1.369

1636 - ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப்
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால் - 5.1.370

1637 - ஆதி தேவர் தம் திரு அருள் பெருமை யார் அறிந்தார்
போத மாதவர் பனிமலர்ப் பொய்கையில் மூழ்கி
மாதோர் பாகனார் மகிழும் ஐ ஆற்றில் ஓர் வாவி
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகெலாம் வியப்ப - 5.1.371

1638 - வம்புலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி
உம்பர் நாயகர் திரு அருள் பெருமையை உணர்வார்
எம் பிரான் தரும் கருணை கொல் இது என இரு கண்
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார் - 5.1.372

1639 - மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார்
அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார் - 5.1.373

1640 - பொன் மலைக் கொடியுடன் அமர்வெள்ளியம் பொருப்பில்
தன்மை ஆம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னும் மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார் - 5.1.374

1641 - காணும் அப்பெருங் கோயிலும் கயிலை மால் வரையாய்ப்
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர்
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத்
தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க - 5.1.375

1642 - தேவர் தானவர் சித்தர் விச் சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக்
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்
தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப - 5.1.376

1643 - கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்சப்
பொங்கியங்களால் பூத வேதாளங்கள் போற்ற - 5.1.377

1644 - அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர்
சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக - 5.1.378

1645 - வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும்
தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப்பாகம்
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் - 5.1.379

1646 - கண்ட ஆனந்தக் கடவினைக் கண்களால் முகந்து
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார் - 5.1.380

1647 - முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர் - 5.1.381

1648 - ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புறக் கயிலை
மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித்
தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ - 5.1.382

1649 - ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச்
செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து - 5.1.383

1650 - மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார் - 5.1.384

1651 - கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக்
கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர் - 5.1.385

1652 - நீடிய அப்பதி நின்று நெய்த்தானமே முதலாக
மாடுயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணி செய்து போற்றித்
தேடிய மாலுக்கு அரியார் திருப் பூந் துருத்தியைச் சேர்ந்தார் - 5.1.386

1653 - சேர்ந்து விருப்பொடும் புக்குத் திரு நட மாளிகை முன்னர்ச்
சார்ந்து வலம் கொண்டு இறைஞ்சித் தம் பெருமான் திரு முன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர் உறும் தன்மையர் ஆனார் - 5.1.387

1654 - திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப்
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப
இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி - 5.1.388

1655 - அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று
பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத்
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார் - 5.1.389

1656 - பல் வகைத் தாண்டகத் தோடும் பரவும் தனித் தாண்டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத் தாண்டகமும்
செல் கதி காட்டிடப் போற்றும் திரு அங்க மாலையும் உள்ளிட்டு
எல்லையில் பன்மைத் தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார் - 5.1.390

1657 - பொன்னி வலம் கொண்ட திருப் பூந்துருத்தி அவர் இருப்பக்
கல் மனத்து வல் அமணர் தமை வாதில் கட்டு அழித்துத்
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளித் திரு நீற்றின் ஒளி கண்டு
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார் - 5.1.391

1658 - தீம் தமிழ் நாட்டு இடை நின்றும் எழுந்து அருளிச் செழும் பொன்னி
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர் பால் செல்வன் எனப்
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார் - 5.1.392

1659 - சண்பை வருந் தமிழ் விரகர் எழுந்தருளத் தாங்கேட்டு
மண் பரவும் பெருங் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து
கண் பெருகுங் களிகொள்ளக் கண்டு இறைஞ்சும் காதலினால்
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்து அருளி எதிர் சென்றார் - 5.1.393

1660 - காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்திக் காதலித்தார்
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி
வாழி அவர் தமைத் தாங்கும் மணிமுத்தின் சிவிகையினைத்
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் எனத் தரித்தார் - 5.1.394

1661 - வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி
அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின்
சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து இலரால் - 5.1.395

1662 - திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந் துருத்திக்கு
அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்
பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார் - 5.1.396

1663 - பிள்ளையார் அதுகேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே
உள்ளமிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத்
துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார் - 5.1.397

1664 - கழு மலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச்
செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள்
தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார் - 5.1.398

1665 - வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால்
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்தப் புனல் நாட்டில்
எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர்
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர் - 5.1.399

1666 - பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும்
நண்புடைய குலச் சிறையார் பெருமையும் ஞானத் தலைவர்
எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர்
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார் - 5.1.400

1671 - பிரம புரத் திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில்
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சிப் பாடுதற்கு அங்கு
உரன் உடைய திரு நாவுக்கு அரசர் உரை செய்து அருளப்
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார் - 5.1.401

1672 - ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்றப் பதி நின்றும்
பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க்
காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம்
தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார் - 5.1.402

1673 - சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள்
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
முன்றிலினை வலம் கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார் - 5.1.403

1674 - எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச்
செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார்
கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார் - 5.1.404

1675 - சீர் திகழும் பாண்டிமா தேவியார் திரு நீற்றின்
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே
பார் பரவும் குலச் சிறையார் வாகீசர் தமைப் பணி உற்று
ஆரகிலாக் காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார் - 5.1.405

1676 - திரு ஆலவாய் அமர்ந்த செஞ்சுடரைச் செழும் பொருள் நூல்
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான
பெரு வாய்மைத் தமிழ் பாடிப் பேணு திருப்பணி செய்து
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார் - 5.1.406

1677 - கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள்
நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேலு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப்
பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார் - 5.1.407

1678 - தென் இலங்கை இராவணன் தன் சிரம் ஈரைந்தும் துணித்த
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த
பிஞ்ஞகரைத் தொழுவதற்கு நினைந்து போய்ப் பெரு மகிழ்ச்சி
துன்னி மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல் அரசர் - 5.1.408

1679 - தேவர் தொழும் தனி முதலைத் திரு இராமேச்சுரத்து
மேவிய சங்கரனை எதிர் நின்று விருப்புறு மொழியால்
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி
நாவரசர் திருத் தொண்டு நலம் பெருகச் செய்து அமர்ந்தார் - 5.1.409

1680 - அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப்
பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலி
செங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம்
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் - 5.1.410

1681 - தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி
வழுவில் திருப்பணி செய்து மனம் கசிவு உற்று எப் பொழுதும்
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள்
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார் - 5.1.411

1682 - தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சிப்
பாம்பு அணிவார் தமைப் பணிவார் பொன்னி நாடது அணைந்து
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே
பூம் புகலூர் வந்து அடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார் - 5.1.412

1683 - பொய்கை சூழ் பூம் புகலூர்ப் புனிதர் மலர்த் தாள் வணங்கி
நையும் மனப் பரிவினோடும் நாள் தோறும் திரு முன்றில்
கை கலந்த திருத் தொண்டு செய்து பெரும் காதல் உடன்
வைகு நாள் எண் இறந்த வண் தமிழ் மாலைகள் மொழிவார் - 5.1.413

1684 - நின்ற திருத் தாண்டகமும் நீடு தனித் தாண்டகமும்
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத் தாண்டகமும்
கொன்றை மலர்ச் சடையார் பால் குறைந்த திரு நேர் இசையும்
துன்று தனி நேர் இசையும் முதலான தொடுத்து அமைத்தார் - 5.1.414

1685 - ஆருயிரின் திரு விருத்தம் தச புராணத்து அடைவும்
பார் பரவும் பாவ நாசப் பதிகம் பன்முறையும்
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானைப் பாடினார் - 5.1.415

1686 - அந் நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள் செய்தார் - 5.1.416

1687 - செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கொவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க
எம் பெருமான் வாகீசர் உழ வாரத்தினில் ஏந்தி
வம்பலர் மென் பூங்கமல வாவியினில் புக எறிந்தார் - 5.1.417

1688 - புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறு பாடு இலா நிலைமை துணிந்து இருந்த
நல்லோர் முன் திருப் புகலூர் நாயகனார் திரு அருளால்
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார் - 5.1.418

1689 - வானகம் மின்னுக் கொடிகள் வந்து இழிந்தால் என வந்து
தான நிறை சுருதிகளில் தகும் அலங்காரத் தன்மை
கான அமுதம் பரக்கும் கனிவாயில் ஒளி பரப்பப்
பானல் நெடுங் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார் - 5.1.419

1690 - கற்பகப் பூந்தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டு அணையோடும் கை பெயரப்
பொற்புறும் அக் கையின் வழிப் பொரு கயல் கண் புடை பெயர
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவபோல் ஆடுவார் - 5.1.420

1691 - ஆடுவார் பாடுவார் அலர் மாரி மேல் பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க
ஓடுவார் மார வேளுடன் மீள்வார் ஒளி பெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார் - 5.1.421

1692 - இத் தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய
அத்தனார் திருவடிக் கீழ் நினைவு அகலா அன்பு உருகும்
மெய்த் தன்மை உணர்வு உடைய விழுத் தவத்து மேலோர் தம்
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார் - 5.1.422

1693 - இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று
பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார் - 5.1.423

1694 - மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வசக்
காதலர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும்
பேதம் இலா ஓர் உணர்வில் பெரிய வரைப் பெயர்விக்க
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார் - 5.1.424

1695 - இந் நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த
மன்னிய அன்பு உறு பத்தி வடிவு ஆன வாகீசர்
மின் நிலவும் சடையார் தம் மெய் அருள் தான் எய்த வரும்
அந்நிலைமை அணித்து ஆகச் சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார் - 5.1.425

1696 - மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால்
தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன்
என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார் - 5.1.426

1697 - மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப்
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று
நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார் - 5.1.427

1698 - வானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் - 5.1.428

1699 - அடியன் ஏன் ஆதரவால் ஆண்ட அரசின் சரிதப்
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அப் பர முனிவன்
கடி மலர் மென் சேவடிகள் கை தொழுது குலச் சிறையார்
முடிவில் புகழ்த் திருத் தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன் - 5.1.429

திருச்சிற்றம்பலம்

5.2 குலச்சிறை நாயனார் புராணம் (1700 - 1710)

திருச்சிற்றம்பலம்



1700 - பன்னு தொல் புகழ்ப் பாண்டி நன் நாட்டு இடைச்
செந்நெலார் வயல் தீம் கரும்பின் அயல்
துன்னு பூகப் புறம் பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மண மேற்குடி - 5.2.1

1701 - அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம்
ஒப்பரும் பெரு நம்பி என்று ஓதிய
செப்பரும் சீர்க் குலச் சிறையார் திண்மை
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர் - 5.2.2

1702 - காரணங்கள் கண் நுதற்கு அன்பர் என்னவே
வாரம் ஆகி மகிழ்ந்தவர் தாள் மிசை
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார் - 5.2.3

1703 - குறியில் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில்
செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார் - 5.2.4

1704 - உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகில் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செஞ்சடையார்க்கு அடியார் எனில்
தலம் உறப் பணிந்து ஏத்தும் தகைமையார் - 5.2.5

1705 - பண்பு மிக்கார் பலராய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண் பெருக்கிய அன்பால் எதிர் கொண்டு
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார் - 5.2.6

1706 - பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து
ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை
ஓது நா வணக்கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார் - 5.2.7

1707 - இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறில் சீர்த்
தென்னவன் நெடு மாறற்குச் சீர் திகழ்
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார்
ஒன்னலர்ச் செற்று உறுதிக் கண் நின்று உளார் - 5.2.8

1708 - ஆய செய்கையர் ஆயவர் ஆறணி
நாயனார் திருப் பாதம் நவின்று உளார்
பாய சீர் புனை பாண்டி மா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார் - 5.2.9

1709 - புன்னையத் தருகந்தர் பொய் நீக்கவும்
தென்னர் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார் - 5.2.10

1710 - வாதில் தோற்ற அமணரை வன் கழுத்
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக் குறும்பர் தாள் - 5.2.11

திருச்சிற்றம்பலம்

5.3 பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் (1711 -1721 )

திருச்சிற்றம்பலம்



1711 - சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவும் பூகஞ்சூழ்புடைத்தாய்
வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை - 5.3.1

1712 - அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார்
சென்னி மதியம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள்
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார் - 5.3.2

1713 - தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக்
கொண்டு செல்ல இரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்த அடைவார்
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும்
புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார் - 5.3.3

1714 - இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின்
மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார்
சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார் - 5.3.4

1715 - மையார் தடங் கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள்
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில்
செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ்
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார் - 5.3.5

1716 - நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதற்பின்
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்செழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்பக் கெழுமினார் - 5.3.6

1717 - இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம்
பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர்
சென்னி மதி தோய் மாட மலி கொடுங் கோளூரைச் சேர்வுற்றார் - 5.3.7

1718 - அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணைவுறுவார்
செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார் - 5.3.8

1719 - மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து
கண்ணில் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று
எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார் - 5.3.9

1720 - நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேல் கொண்டு
காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார் - 5.3.10

1721 - பயிலைச் செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுறக்
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி
மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும்
குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம் - 5.3.11

திருச்சிற்றம்பலம்

5.4 காரைக்கால் அம்மையார் புராணம் (1722 - 1787)

திருச்சிற்றம்பலம்



1722 - மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்
ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக்
கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால் - 5.4.1

1723 - வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்
அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார் - 5.4.2

1724 - வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின்
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத்
தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார் - 5.4.3

1725 - பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம்
செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால்
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் - 5.4.4

1726 - வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள்
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதக் கொள்கையினில் குறுகினார் - 5.4.5

1727 - நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி 1
மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்
தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார் - 5.4.6

1728 - நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண்
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத்
தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார் - 5.4.7

1729 - வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து
தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த
பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார் - 5.4.8

1730 - மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச் சென்று
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப்
பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும்
சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான் - 5.4.9

1731 - மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள்
அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி
பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார் - 5.4.10

1732 - அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து
தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத்
தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக்
களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள் - 5.4.11

1733 - மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள்
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன்
பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன்
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான் - 5.4.12

1734 - மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்து அதன்பின்
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும்
தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி
மிகப் புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான் - 5.4.13

1735 - ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ்
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப்
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார் - 5.4.14

1736 - நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம்பொன்னும் நவ மணியும் செழுந் துகிலும் முதலான
தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள் - 5.4.15

1737 - பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான் - 5.4.16

1738 - கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு
மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின்
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர்
உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார் - 5.4.17

1739 - வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு
நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப்
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார் - 5.4.18

1740 - கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும்
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார் - 5.4.19

1741 - இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார் - 5.4.20

1742 - மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத்
தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர்
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப்
பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார் - 5.4.21

1743 - மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப்
பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக்
கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார் - 5.4.22

1744 - இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்
மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல்
அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார் - 5.4.23

1745 - மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன்
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார் - 5.4.24

1746 - அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார்
மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான்
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று - 5.4.25

1747 - மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான்
முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால்
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான் - 5.4.26

1748 - அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்
கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை
மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார் - 5.4.27

1749 - செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு
மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார் - 5.4.28

1750 - ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்
தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்
ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான் - 5.4.29

1751 - பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான் - 5.4.30

1752 - வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில் - 5.4.31

1753 - விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி
நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும்
வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள் - 5.4.32

1754 - கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி
சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும்
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான் - 5.4.33

1755 - கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்
அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்
படர் புனல் கன்னி நாட்டோ ர் பட்டினம் மருங்கு சேர்ந்தான் - 5.4.34

1756 - அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான் - 5.4.35

1757 - பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்
புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில் - 5.4.36

1758 - முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்
இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப்
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான் - 5.4.37

1759 - மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத்
தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு
கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான் - 5.4.38

1760 - இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்
கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன
தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக - 5.4.39

1761 - விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன்
வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி
அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று
கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே - 5.4.40

1762 - அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்
தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார் - 5.4.41

1763 - மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத்
தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும்
தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார் - 5.4.42

1764 - சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி
மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து
குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை
தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார் - 5.4.43

1765 - வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த
பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு
முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான் - 5.4.44

1766 - தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும்
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான் - 5.4.45

1767 - கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும்
அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார் - 5.4.46

1768 - மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்
நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான் - 5.4.47

1769 - என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார்
மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார் - 5.4.48

1770 - ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார் - 5.4.49

1771 - ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார் - 5.4.50

1772 - மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற
தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார் - 5.4.51

1773 - உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை
அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்
நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி - 5.4.52

1774 - ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண
வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார் - 5.4.53

1775 - கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள்
கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே
அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை
எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார் - 5.4.54

1776 - வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று
தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்
படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின்
நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார் - 5.4.55

1777 - தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச்
சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே - 5.4.56

1778 - அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து
தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன
நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான் - 5.4.57

1779 - வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார் - 5.4.58

1780 - அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார் - 5.4.59

1781 - இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் - 5.4.60

1782 - கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான் - 5.4.61

1783 - அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத
மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம்
நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே - 5.4.62

1784 - ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு
மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி
ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில் - 5.4.63

1785 - மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்
இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி
எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம்
கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார் - 5.4.64

1786 - மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி
கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர்
எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா - 5.4.65

1787 - ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச்
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம்
போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன் - 5.4.66

திருச்சிற்றம்பலம்

5.5 அப்பூதி அடிகள் நாயனார் புராணம் (1788 - 1832 )

திருச்சிற்றம்பலம்



1788 - தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்
ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார்
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னே
காண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார் - 5.5.1

1789 - களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆ வொடு மேதி மற்றும்
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார் - 5.5.2

1790 - வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர்
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால்
படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ள
முடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில் - 5.5.3

1791 - பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின்
திருப் பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கு அரசர்
ஒருப் படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார் - 5.5.4

1792 - அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள் உடையார்
உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றிக்
குளம் நிறைந்த நீர்த் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர்ப் பந்தர் வந்து அணைந்தார் - 5.5.5

1793 - வந்து அனைந்த வாகீசர் மந்த மாருத சீதப்
பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளிச்
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசெனும் பேர்
சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார் - 5.5.6

1794 - இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு
அப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால்
செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார்
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார் - 5.5.7

1795 - என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
நின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்
துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண்
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார் - 5.5.8

1796 - அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார்
தங்கும் மனைக் கடைத் தலை முன் சார்வாக உள் இருந்த
திங்களூர் மறைத் தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார்
நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார் - 5.5.9

1797 - கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம்
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார்
முடிவில் தவம் செய்தேன் கொல் முன்பு ஒழியும் கருணை புரி
வடிவுடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார் - 5.5.10

1798 - ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்துள் இறைஞ்சி
வருகின்றோம் வழிக் கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம்
தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்ட அத் தகைமை
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார் - 5.5.11

1799 - ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த
ஈறில் தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாதே
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல்
கூறும் என எதிர் மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார் - 5.5.12

1800 - நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய்
நன்று அருளிச் செய்து இலீர் நாணில் அமண் பதகர் உடன்
ஒன்றிய மன்னவன் சூட்சி திருத் தொண்டின் உறைப் பாலே
வென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார் - 5.5.13

1801 - நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளியச்
செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுத
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி - 5.5.14

1802 - பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை
அங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்
எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார் - 5.5.15

1803 - திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர்
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேற
அருளும் பெரும் சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்த
தெருளும் உணர்வு இல்லாத சிறுமை யேன் யான் என்றார் - 5.5.16

1804 - அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம்
கர கமலம் மிசை குவியக் கண் அருவி பொழிந்து இழிய
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத்
தரையின் மிசை வீழ்ந்தவர் தம் சரண கமலம் பூண்டார் - 5.5.17

1805 - மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருள
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு மறையோர்
முற்றவும் களி கூற முன் நின்று கூத்தாடி
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார் - 5.5.18

1806 - மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்து ஆர்வம் உறப்
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார் - 5.5.19

1807 - மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதல் உடன்
முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும்
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார் - 5.5.20

1808 - ஆசனத்தில் பூசனைகள் அமர் வித்து விருப்பின் உடன்
வாசம் நிறை திரு நீற்றுக் காப்பு ஏந்தி மனம் தழைப்பத்
தேசம் உய்ய வந்த வரைத் திரு அமுது செய்விக்கும்
நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் - 5.5.21

1809 - செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி
எய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்று
மை திகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றே
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார் - 5.5.22

1810 - தூய நல் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கி
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள்
சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழை
மேய பொன் குருத்துக் கொண்டுவா என விரைந்து விட்டார் - 5.5.23

1811 - நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன் என்று
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்குப் பெரிய வாழை
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று
அல்லல் உற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்று அன்றே - 5.5.24

1812 - கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்ற
பை அரா உதறி வீழ்த்துப் பதைப்பு உடன் பாந்தாள் பற்றும்
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக்
கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான் - 5.5.25

1813 - பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும்
அரும் தவர் அமுது செய்யத் தாழ்க்க யான் அறையேன் என்று
திருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான் - 5.5.26

1814 - எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்து
விரியுரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான்
பரி கலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படி மேல் வீழ்ந்தான் - 5.5.27

1815 - தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும்
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று
துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார் - 5.5.28

1816 - பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து மூடிப்
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று
விறல் உடைத் தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார் - 5.5.29

1817 - கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்றே
அடிசிலும் கறியும் எல்லாம் அழகு உற அணைய வைத்துப்
படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம்
குடி முழுதும் உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு - 5.5.30

1818 - அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர்
திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்தும் முன்னர்
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும்
பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில் - 5.5.31

1819 - ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கிக்
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார் - 5.5.32

1820 - அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடு மாற்றம் சேர நோக்கி
இவ் உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால்
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி - 5.5.33

1821 - பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ
வருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே - 5.5.34

1822 - நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம்
யாவர் இத் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்
பா இசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்று வித்தார் - 5.5.35

1823 - தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று
சேவுகைத்தவர் ஆட் கொண்ட திருநாவுக்கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே - 5.5.36

1824 - பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்
நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள்
அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச்
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார் - 5.5.37

1825 - ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும்
தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்துச் சார்வார் - 5.5.38

1826 - புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித்
திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றி
நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார் - 5.5.39

1827 - திருந்திய வாச நல் நீர் அளித்திட திருக்கை நீவும்
பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகள் உடனே நோக்கி
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார் - 5.5.40

1828 - மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச்
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்கக்
கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும்
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே - 5.5.41

1829 - மா தவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்து
காதல் நண்பு அளித்துப் பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்
நாதர் தம் பாதம் சேர்ந்து நல் தமிழ்ப் பதிகம் செய்வார் - 5.5.42

1830 - அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்ற
மெய்ப் பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்த
இப் பூதி பெற்ற நல்லோர் எல்லை இல் அன்பால் என்றும்
செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம் - 5.5.43

1831 - இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும்
அவ்வரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும்
செவ்விய நெறியது ஆகத் திருத் தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே - 5.5.44

1832 - மான் மறிக் கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றிப்
கான் மலர்க் கமல வாவிக் கழனி சூழ் சாத்த மங்கை
நான் மறை நீல நக்கர் திருத் தொழில் நவிலல் உற்றேன் - 5.5.45

திருச்சிற்றம்பலம்

5.6 திரு நீல நக்க நாயனார் புராணம் (1833 -1870)

திருச்சிற்றம்பலம்



1833 - பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும்
காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச்
சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு - 5.6.1

1834 - நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார்
மென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவி
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம்
பன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை - 5.6.2

1835 - ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில்
ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர்
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார் - 5.6.3

1836 - சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர்
ஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார் - 5.6.4

1837 - வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார் - 5.6.5

1838 - மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
எத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார் - 5.6.6

1839 - ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார் - 5.6.7

1840 - உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன
குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர் - 5.6.8

1841 - அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்
துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார் - 5.6.9

1842 - நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்
மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித்
தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார் - 5.6.10

1843 - தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம்
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை
நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச்
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி - 5.6.11

1844 - விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக - 5.6.12

1845 - பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம்
சிதைக்கு மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண்
புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச்
சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார் - 5.6.13

1846 - மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில்
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்
நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார் - 5.6.14

1847 - மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர
முன் அனைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய்
உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார் - 5.6.15

1848 - மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார் - 5.6.16

1849 - அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான் மறைத் திரு நீல நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார் - 5.6.17

1850 -பள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில்
வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக்
கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள - 5.6.18

1851 - கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக்
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத்
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார் - 5.6.19

1852 -போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம்
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார் - 5.6.20

1853 - பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த
இன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி
அன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார் - 5.6.21

1854 - அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாள்஢ல்
மன்னு பூம் தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம்
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார் - 5.6.22

1855 -பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ
மண் பெரும் தவப் பயன் பெற மருவு நல் பதிகள்
விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார்
சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார் - 5.6.23

1856 -நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர்
தோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர்
கூடும் அப் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர் - 5.6.24

1857 -கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து
தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள்
நாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்து
ஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார் - 5.6.25

1858 -சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம்
ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்
பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார் - 5.6.26

1859 -பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி
வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார் - 5.6.27

1860 -அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக்
குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில்
இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும்
தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார் - 5.6.28

1861 -சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார் - 5.6.29

1862 -நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர் - 5.6.30

1863 - ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர
தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர்
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார் - 5.6.31

1864 -கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர்
அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தே
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார் - 5.6.32

1865 -பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி
அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி
எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார் - 5.6.33

1866 -பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்
வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார் - 5.6.34

1867 - மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும்
தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர்
பூவடித் தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார் - 5.6.35

1868 - சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும்
நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்
திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர் - 5.6.36

1869 -பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க
வருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி
ஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனே
திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார் - 5.6.37

1870 - தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில்
வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி
இரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால் 1865-3
ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம் - 5.6.38

திருச்சிற்றம்பலம்

5.7 நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் (1871 -1903 )

திருச்சிற்றம்பலம்



1871 - வையம் புரக்கும் தனிச் செங்கோல் வளவர் பொன்னித் திருநாட்டுச்
செய்ய கமலத் தடம் பணையும் செழும் நீர்த் தடமும் புடை உடைத்தாய்
பொய்தீர் வாய்மை அருமறை நூல் புரிந்த சீலப் புகழ் அதனால்
எய்தும் பெருமை எண் திசையும் ஏறூர் ஏமப் பேர் ஊரால் - 5.7.1

1872 - மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும்பூகம்
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழுநீர்ச் செய் - 5.7.2

1873 - பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது படச் செய்ய
துணர் மென் கமலம் இடை இடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன
புணர் வெண் புரி நூலவர் வேள்விக் களத்தில் புனைந்த வேதிகை மேல்
மணல் வெண் பரப்பின் இடை இடையே வளர்த்த செந்தீமானுமால் - 5.7.3

1874 - பெருமை விளங்கும் அப்பதியில் பேணும் நீற்றுச் சைவ நெறி
ஒருமை நெறி வாழ் அந்தணர் தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப் பெற்ற தவத்து
அருமை புரிவார் நமி நந்தி அடிகள் என்பார் ஆயினார் - 5.7.4

1875 - வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செந்தீ எனத் தகுவார்
தூய்மைத் திரு நீற்று அடைவே மெய்ப் பொருள் என்று அறியும் துணிவினார்
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார் - 5.7.5

1876 - அவ்வூர் நின்றும் திருவாரூர் அதனை அடைவார் அடியார்மேல்
வெவ்வூறு அகற்றும் பெருமான் தன் விரை சூழ் மலர்த்தாள் பணி உறுதல்
எவ்வூதியமும் எனக் கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும்
தெவ்வூர் எரித்த வரைச்சிலையார் திருப் பாதங்கள் வணங்கினார் - 5.7.6

1877 - செம் பொன் புற்றின் மாணிக்கச் செழும் சோதியை நேர் தொழுஞ் சீலம்
தம் பற்றாக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து
அம் பொன் புரிசைத் திருமுன்றில் அணைவார் பாங்கோர் அரன் நெறியின்
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உட்புக்கு வணங்க நண்ணினார் - 5.7.7

1878 - நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்பு உற்று எழுந்த காதல் உடன்
அண்ணலாரைப் பணிந்து எழுவார் அடுத்த நிலைமைக் குறிப்பினால்
பண்ணுந் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்
எண்ணில் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார் - 5.7.8

1879 - எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும்
செழுந்தண் பதியின் இடை அப்பால் செல்லில் செல்லும் பொழுது என்ன
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும்
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார் - 5.7.9

1880 - கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேற் கொள்ளும் புரை நெறியார் - 5.7.10

1881 - அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர்க் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ ஒருவாக்கு எழுந்தது உயர் விசும்பில் - 5.7.11

1882 - வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்குப் பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடு வந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளாச்
சிந்தை மகிழ்ந்து நமிநந்தி அடிகள் செய்வது அறிந்திலரால் - 5.7.12

1883 - சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்
நன்னீர் பொய்கை நடுப்புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி
அந்நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார் - 5.7.13

1884 - சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய - 5.7.14

1885 - நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரியக்
குறையும் தகளிகலுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அவ்விரவே அணைவார் பணி உற்று ஒருப்பட்டார் - 5.7.15

1886 - இரவு சென்று தம் பதியில் எய்தி மனைப்புக்கு என்றும் போல்
விரவி நியமத் தொழில் முறையே விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்து அருளிப் பள்ளி கொண்டு புலர் காலை
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார் - 5.7.16

1887 - வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம் கொண்டு
சிந்தை மகிழப் பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார் - 5.7.17

1888 - பண்டு போலப் பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுகத்
தண்டி அடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வில் அமண்
குண்டர் அழிய ஏழ் உலகும் குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர் - 5.7.18

1889 - நாத மறை தேர் நமிநந்தி அடிகளார் நல் தொண்டு ஆகப்
பூத நாதர் புற்றிடங் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரி அணையின்
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம விதி விளங்க - 5.7.19

1890 - வென்றி விடையார் மதிச் சடையார் வீதி விடங்கப் பெருமாள் தாம்
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரமாம் திருநாள் உயர் சிறப்பும்
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார் - 5.7.20

1891 - இன்ன பரிசு திருப் பணிகள் பலவும் செய்தே ஏழ் உலகும்
மன்னும் பெருமைத் திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார்
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமி நந்தி அடிகள் தொழுதார் நாம் உய்ய - 5.7.21

1892 - தேவர் பெருமான் எழுச்சி திரு மணலிக்கு ஒரு நாள் எழுந்து அருள
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம்
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார் - 5.7.22

1893 - பொழுது வைகச் சேவித்துப் புனிதர் மீண்டும் கோயில் புகத்
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழ்கின்றார் - 5.7.23

1894 - திங்கள் முடியார் பூசனைகள் முடித்துச் செய்யும் கடன் முறையால்
அங்கி தனை வேட்டு அமுது செய்து பள்ளி கொள்வீர் என அவர்க்குத்
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று - 5.7.24

1895 - ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம்புகுந்து
வேத நாதர் பூசனையைத் தொடங்க வேண்டும் அதற்கு நீ
சீத நன்னீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் எனச் செப்பக்
காதலால் மனையார் தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார் - 5.7.25

1896 - ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ? மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ? அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின் கண் - 5.7.26

1897 - மேன்மை விளங்கும் திருவாரூர் வீதி விடங்கப் பெருமாள் தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளிச் செய்து அங்கு எதிர் அகன்றார் - 5.7.27

1898 - ஆதி தேவர் எழுந்து அருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்த படியே வழிபட்டு
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
நாதனார் தம் திருவாரூர் புகுத எதிர் அந் நகர் காண்பார் - 5.7.28

1899 - தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும்
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகிப் பெருகு ஒளியால்
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடிகுவித்த
கைவைத்து அஞ்சி அவனிமிசை விழுந்து பணிந்து கள்஢சிறந்தார் - 5.7.29

1900 - படிவம் மாற்றிப் பழம் படியே நிகழ்வும் கண்டு பரமர் பால்
அடியேன் பிழையைப் பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால்
குடியும் திருவாரூர் அகத்துப் புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழச் செய்து நிலவுவார் - 5.7.30

1901 - நீறு புனைவார் அடியார்க்கு நெடுநாள் நியதி ஆகவே
வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணிப் புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்
பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார் - 5.7.31

1902 - இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழச் செய்து
நன்மை பெருகும் நமிநந்தி அடிகள் நயமார் திருவீதிச்
சென்னி மதியும் திருநதியும் அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார் - 5.7.32

1903 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
நாட்டார் அறிய முன்னாளில் நன்னாள் உலந்த ஐம் படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறைப் புதல்வன் தன்னைப் புக்கு ஒளியூர்த்
தட்டா மரையின் மடுவின் கண் தனி மா முதலை வாய் நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே


திருச்சிற்றம்பலம்

திருநின்ற சருக்கம் முற்றிற்று.

சருக்கம் 5-க்குத் திருவிருத்தம் - 1903


This webpage was last updated on 29 November 2004